இப்போ நீட் தேர்வு ரொம்ப அவசியமா..? மத்திய அரசு அறிவிப்புக்கு எதிராக கொந்தளிக்கும் திருமாவளவன்.!

By Asianet TamilFirst Published Jul 12, 2021, 9:40 PM IST
Highlights

செப்டம்பர்-அக்டோரில் கொரோனா தொற்று உச்சத்தில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த நேரத்தில் நீட் தேர்வை நடத்துவதற்கு ஒன்றிய அரசு திட்டமிட்டிருப்பது கண்டிக்கத்தக்கது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
 

இதுதொடர்பாக திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா மூன்றாவது அலை ஏற்கனவே ஆரம்பித்துவிட்டது என மருத்துவ நிபுணர்கள் கூறியிருக்கும் நிலையில் இந்திய ஒன்றிய அரசு செப்டம்பர் 12ஆம் தேதி நீட் தேர்வு நடைபெறும் என அறிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. மாணவர்களின் பாதுகாப்பு கருதி நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்; இந்த அறிவிப்பைத் திரும்பப் பெறவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.
கொரோனா மூன்றாவது அலை ஜூலை 4ஆம் தேதி ஆரம்பித்து விட்டதாக ஹைதராபத்தைச் சேர்ந்த மருத்துவ நிபுணர் கூறியுள்ளார். கான்பூர் ஐஐடி-இல் நடத்தப்பட்ட ஆய்வில் கொரோனா மூன்றாவது அலை செப்டம்பர் - அக்டோபர் மாதங்களில் உச்சத்தில் இருக்கும் எனவும் அப்போது நாளொன்றுக்கு 5 லட்சம் பேர்வரை நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவார்கள் எனவும் கண்டறியப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் நீட் தேர்வை நடத்துவதற்கு ஒன்றிய அரசு திட்டமிட்டிருப்பது மாணவர்களின் உயிரைப்பற்றி அது கவலைப்படாததையே காட்டுகிறது.
சில நாட்களுக்கு முன்புதான் ஒன்றிய அரசின் சுகாதாரத்துறை செயலாளர் கொரோனா மூன்றாவது அலையின்போது 8 மாநிலங்கள் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகும் என எச்சரித்திருந்தார். கோவா, இமாச்சலப் பிரதேசம், கேரளா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், தமிழ்நாடு, உத்தரகாண்ட் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய 8 மாநிலங்களில் கொரோனா மூன்றாவது அலையின் தாக்குதல் அதிகமாக இருக்கும் எனவும்; அந்த மாநிலங்களில் தனிமனித இடைவெளியைக் கடைபிடித்தல், முகக் கவசம் அணிதல் உட்பட பாதுகாப்பு எச்சரிக்கைகளைக் கடுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
இந்திய அளவில் புதிய தொற்றுகளின் எண்ணிக்கை நேற்று 42,766 ஆக உயர்ந்திருந்தது. 1200 பேர் மரணமடைந்ததாகக் கூறப்பட்டது. டெல்டா ப்ளஸ் என்ற மிகவும் ஆபத்தான புதிய வகை வைரஸ் நாட்டின் பல மாநிலங்களிலும் இப்பொழுது வேகமாகப் பரவி வருகிறது. திரிபுராவிலிருந்து சோதனைக்கு அனுப்பப்பட்ட வைரஸ் சாம்பிள்களில் 90 சதவீதம் டெல்டா ப்ளஸ் வைரஸ் என்று கண்டறியப்பட்டிருப்பது உலகத்தையே அச்சத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
கொரோனாவிலிருந்து காப்பாற்றிக்கொள்ள தடுப்பூசி மட்டுமே ஒரே வழி என்ற நிலையில், போதுமான எண்ணிக்கையில் மாநிலங்களுக்குத் தடுப்பூசி வழங்கப்படவில்லை. மாநில அரசுகள் எவ்வளவோ வலியுறுத்தியும், உச்ச நீதிமன்றமே அறிவுறுத்தியும்கூட ஒன்றிய அரசு வாக்குறுதி அளித்த வேகத்திலோ, எண்ணிக்கையிலோ தடுப்பூசிகளை மாநிலங்களுக்கு வழங்கவில்லை. இதனால் மூன்றாவது அலையிலிருந்து மக்களைப் பாதுகாப்பது மிகப்பெரிய சவாலாக மாறி இருக்கிறது.
இந்தச் சூழலில் நீட் தேர்வுக்கான தேதியை அறிவித்திருப்பது எவ்விதத்திலும் ஏற்புடையது அல்ல. கொரோனாவைக் காரணம் காட்டி சிபிஎஸ்இ தேர்வுகளைத் தன்னிச்சையாக ரத்து செய்த ஒன்றிய அரசு, இப்போது மாநில அரசுகளைக் கலந்து ஆலோசிக்காமல் நீட் தேர்வுத் தேதியை அறிவித்திருப்பது அதன் மேலாதிக்கப் போக்கையும், பொறுப்பற்ற தன்மையையுமே காட்டுகிறது. இந்தப் போக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. எனவே, உடனடியாக இந்த அறிவிப்பை ஒன்றிய அரசு திரும்பப் பெற்று, இந்த ஆண்டுக்கான நீட் தேர்வை ரத்துசெய்யவேண்டும் என வலியுறுத்துகிறோம்” என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

click me!