இனி ஊடக விவாதங்களில் அதிமுக பங்கேற்காது... ஓபிஎஸ் - இபிஎஸ் கூட்டாக அதிரடி அறிவிப்பு..!

By Asianet TamilFirst Published Jul 12, 2021, 9:25 PM IST
Highlights

ஊடக விவாதங்களில் அதிமுக நிர்வாகிகள், செய்தித் தொடர்பாளர்கள் இனி பங்கேற்க மாட்டார்கள் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் அறிவித்துள்ளார்கள்.
 

இதுதொடர்பாக ஓபிஎஸ்-ஈபிஎஸ் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “மக்களின் அடிப்படைத் தேவைகள், தினசரி பிரச்னைகள் பல இருக்கிறபோது, அதைப்பற்றி எல்லாம் சிறிதளவும் கவலைப்படாமல், ஜனநாயகத்தின் நான்காம் தூண்களாக இருக்கக்கூடிய ஊடக நிறுவனங்கள், அதிமுகவின் புகழுக்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையிலும் சிறுமைப்படுத்தும் நோக்கிலும் மனம்போன போக்கில் ஊடக அறத்திற்குப் புறம்பாகவும் கழகத் தலைவர்களுக்கு களங்கத்தை ஏற்படுத்துகிற விதத்திலும், விவாத தலைப்புகளை வைத்து நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்துவது வருத்தத்தையும் வேதனையையும் அளிக்கிறது.
மேற்சொன்ன காரணங்களால், ஊடக விவாதங்களில் அதிமுக சார்பில் கழக நிர்வாகிகளோ, செய்தித் தொடர்பாளர்களோ, கழகத்தைச் சார்ந்தவர்களோ யாரும் இனி பங்கேற்க மாட்டார்கள் என்பதையும் எங்களைப் பிரதிநிதிப்படுத்துவதாகக் கூறிகொண்டு யாரையும் வைத்து பேசுவதை நிறுத்துமாறும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். கழகத்தின் பெயரை வேறு எந்த வகையிலும் பிரதிபலிக்கும்படி யாரையும் தங்கள் ஊடக வழியாக கருத்துகளை தெரிவிக்க அழைக்கவோ, அனுமதிக்கவோ வேண்டாம் என்றும் வேறு யாரையும் அழைத்து அவர்களை அதிமுக என்று அடையாளப்படுத்த வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறோம்” என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 

click me!