மு.க.ஸ்டாலினுடன் இணக்கமா..? தனி ஆர்வத்தனம் காட்டும் ஓ.பி.எஸ்... அதிர்ச்சியில் அதிமுக..!

By Thiraviaraj RMFirst Published May 8, 2021, 3:12 PM IST
Highlights

இந்த அறிவிப்பு மு.க.ஸ்டாலினை பாராட்டவா? அல்லது எடப்பாடி பழனிசாமியை வெறுப்பூட்டவா என்கிற பேச்சு எழுந்துள்ளது.
 

எப்போதும் அறிக்கை வெளியிடும்போது, அதிமுக ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கையெழுத்துடன் வெளிவரும். மு.க.ஸ்டாலின் ஆட்சியேற்றதும் லாக்டவுண் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை வரவேற்றுள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம், வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சி கொடி இல்லை, சின்னம் பொறிக்கப்படவில்லை, எடப்பாடியின் கையெழுத்து இல்லை. இப்படி ஒரு அறிக்கை வெளிவந்துள்ளது பல கோணப்பார்வையை உணர்த்தி இருக்கிறது.

 

அதிமுகவில் யார் எதிர்கட்சித் தலைவர் என்கிற யுத்தம் நடந்து கொண்டிருக்கும்போது மு.க.ஸ்டாலினை பாராட்டி தனி ஆர்வத்தனம் காட்டி இருக்கிறார் ஓ.பி.எஸ். அந்த அறிக்கையில், ‘’கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும்‌ இச்சூழலில்‌ முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருப்பது நோய்‌ தொற்று பரவலின்‌ தீவிரத்தை கட்டுப்படுத்திட பேருதவியாக இருக்கும்‌. எளியோரின்‌ பசிதீர்க்கும்‌ அம்மா உணவகங்கள்‌ ஊரடங்கு காலத்தில்‌ தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்பட்டிருப்பதையும்‌ டாஸ்மாக்‌ கடைகள்‌ மூடப்பட்டதையும்‌ வரவேற்கிறேன்‌.

மே-10 ஆம்‌ தேதி முதல்‌ தான்‌ ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருப்பதாலும்‌, இன்றும்‌, நாளையும்‌ கடைகள்‌ திறந்திருக்கும்‌ என்பதாலும்‌ பொதுமக்கள்‌ அவசரம்‌ கொள்ளாமல்‌, கூட்டம்‌ கூடுதலைத்‌ தவிர்த்து பொறுமையாக சமூக இடைவெளியுடன்‌ பொருட்களை வாங்கிச்‌ செல்ல வேண்டுமென கேட்டுக்‌ கொள்கிறேன்‌. காய்ச்சல்‌ போன்ற ஏதேனும்‌ அறிசூறி தென்பட்டால்‌ உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையை அணுகி பரிசோதனை செய்து கொள்வதும்‌ மிகவும்‌ அவசியம்‌.

அரசு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதால்‌ ஏழை எளிய பொதுமக்கள்‌, அவசர மருத்துவ சிகிச்சை மற்றும்‌ அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியில்‌ செல்ல ஏதுவாக வாடகை கார்‌ மற்றும்‌ ஆட்டோக்கள்‌ 24 மணி நேரமும்‌ இயங்குவதை அரசு உறுதிசெய்ய வேண்டும்‌. மேலும்‌ மினி கிளினிக்குகளின்‌ எண்ணிக்கையையும்‌, அதில்‌ தற்காலிக மருத்துவர்களின்‌ நியமனத்தையும்‌ அதிகரித்து 24 மணிநேரமும்‌ இயங்க செய்தால்‌ பெரிய அரசு மருத்துவமனைகளில்‌ கூட்டம்‌ குறையும்‌. நோயாளிகளின்‌ சிரமமும்‌ களையப்படும்‌.
 
கடந்த ஓராண்டிற்கும்‌ மேலாக தொடர்ந்து கோவிட்‌ தொற்றுக்கு சிகிச்சை அளித்து வருகின்ற மருத்துவர்கள்‌ செவிலியர்கள்‌ மற்றும்‌ பிற பணியாளர்களது சேவையை கெளரவிக்கும்‌ வண்ணம்‌ அரசு ஒவ்வொரு மாதமும்‌ ஊக்கத்தொகை வழங்கி அவர்கள்‌ பணியை ஊக்குவிக்க வேண்டும்‌. மருத்துவமனைகளில்‌, தடுப்பூசிகள்‌, மருந்துகள்‌ படுக்கை வசதிகள்‌ மற்றும்‌ ஆக்சிஜன்‌ ஆகியவற்றை இருப்பு வைத்துக்‌ கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு, பொதுமக்கள்‌ பாதுகாப்பினை உறுதி செய்திட வேண்டும்‌, உயிர்பலி எண்ணிக்கையை குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு முதலமைச்சர்‌ மு.க. ஸ்டாலின்‌ அவர்களை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்‌. 

நோய்‌ தொற்றின்‌ தீவிரத்தை உணர்ந்து அரசு கட்டுப்பாடுகளை முறையாகக்‌ கடைபிடித்து, மிகுந்த கவனமுடன்‌ இருக்க வேண்டும்‌ என பொதுமக்களையும்‌ அன்போடு கேட்டுக்‌ கொள்கிறேன்‌, எனத் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு மு.க.ஸ்டாலினை பாராட்டவா? அல்லது எடப்பாடி பழனிசாமியை வெறுப்பூட்டவா என்கிற பேச்சு எழுந்துள்ளது.
 

click me!