தூத்துக்குடி வன்முறைக்கும் திமுகதான் காரணமா? பழிபோடும் அரசியல் என்று பஞ்ச் வைக்கிறார் ரஜினிகாந்த்... 

First Published May 30, 2018, 9:08 AM IST
Highlights
Is dmk reason for Thoothukudi violence blaming politics says Rajinikanth


தூத்துக்குடியில் ஏற்பட்ட கலவரத்துக்கு திமுகதான் காரணம் என்று முதலமைச்சர் கூறியது பழிபோடும் அரசியல் என்று ரஜினிகாந்த் சுட்டி காட்டியுள்ளார்.

தமிழக சட்டசபையில் 2018  - 2019 பட்ஜெட் கடந்த மார்ச் மாதம் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடத்த நேற்று மீண்டும் சட்டசபை கூடியது. 

சட்டசபை கூட்டத்தின் முதல் நிகழ்வாக கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்பட்டது. கேள்வி நேரம் முடிந்ததும், தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் 13 பேர் கொல்லப்பட்டது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

அதில், "ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி தூத்துக்குடி மக்கள் 99 நாட்கள் அமைதியாக போராடி வந்திருக்கிறார்கள். 100-வது நாளில் ஸ்டெர்லைட் ஆலையை நோக்கி பேரணியாக செல்வோம் என்று முன்கூட்டியே அறிவித்துவிட்டு பேரணியை நடத்தியிருக்கிறார்கள். 

அப்பாவி மக்கள் மீது சீருடையில் இருந்த காவலாளர்களும், சீருடையில் இல்லாத காவலாளர்களும் துப்பாக்கி சூடு நடத்தியிருக்கிறார்கள். அந்த துப்பாக்கி சூட்டில் கொடூரமாக 13 பேர் இறந்திருக்கிறார்கள். 

அந்த துப்பாக்கி சூட்டின்போது, குறிபார்த்து சுடும் எஸ்.எல்.ஆர். துப்பாக்கிகள், எந்திர துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. ஆனால், அதுதொடர்பாக வெளியான செய்திக்குறிப்பில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது என்பதை தமிழக அரசு ஒத்துக்கொள்ளவில்லை.

முதல்-அமைச்சரின் விவர அறிக்கையில் கூட பொது சொத்துக்கு மேலும் சேதம் விளைவிக்காமல் தடுக்கவும், கலவரக்காரர்களை தடுத்து நிறுத்த முயற்சித்தும், அவர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீசி, வன்முறையை கட்டுக்குள் கொண்டுவர தடியடி நடத்தப்பட்டது என்றுதான் சொல்லப்பட்டு இருக்கிறது. "துப்பாக்கி சூடு" என்ற வார்த்தையே இந்த அவைக்குறிப்பில் இடம்பெறவில்லை.

தனியார் ஆலைக்காக ஒரு துப்பாக்கி சூட்டை நடத்தி, இப்படியொரு கொடுமையை செய்தது ஏன்?. ஸ்டெர்லைட் போராட்டம் பற்றி மாநில உளவுத்துறை கொடுத்த அறிக்கை என்ன?. இதுபற்றி ஒரு வெள்ளை அறிக்கையை இந்த அரசு உடனடியாக வெளியிட வேண்டும்.

என்று மு.க.ஸ்டாலின் பேசி முடித்ததும், தி.மு.க. உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர். 

அதன்பிறகு, தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்து பேசினார்.

அதில், "மே 22-ஆம் தேதி காலை 10 மணியளவில் ஆயிரக்கணக்கானோர் மடத்தூர் பகுதியிலிருந்தும் பண்டாரம்பட்டி, மீளவிட்டான், திரேஸ்புரம், குரூஸ்புரம் பகுதிகளிலிருந்தும் வந்தனர். திமுக சட்டப்பேரவை உறுப்பினரும், தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலாளருமான கீதா ஜீவன் மற்றும் சுமார் 200 திமுகவினர் காலை 9 மணியளவில் போராட்டத்தில் கலந்துகொள்ள ஊர்வலமாகச் சென்றனர்.

போராட்டத்தில் பங்கேற்ற மேலும் சில அமைப்புகளைச் சார்ந்தவர்களின் தூண்டுதலால் திடீரென மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் மற்றும் ஸ்டெர்லைட் ஆலையை முற்றுகையிட்டனர். சில விஷமிகள் கூட்டத்தில் ஊடுருவி காவல்துறையினர் மீது கல்லெறிந்து, தாக்கி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை சேதப்படுத்தினர்.

அனைத்துத் தடுப்புகளையும் மீறி விஷமிகள் வன்முறையில் ஈடுபட்டதால், பொதுமக்களின் உயிர்களையும், உடைமைகளையும் பாதுகாக்கும் நோக்கில் தவிர்க்க முடியாத சூழலில் தகுந்த எச்சரிக்கைக்குப் பிறகு நடவடிக்கை மேற்கொண்டு போராட்டக்காரர்களைக் கலைந்து போகச் செய்தனர்.

இதையடுத்து காவல்துறை தலைமை இயக்குநரை நேரில் அழைத்து தூத்துக்குடியில் அமைதி திரும்ப நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டேன்" என்று கூறினார்.

இந்த நிலையில் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பாதிக்கபட்டவர்களை காண இன்று காலை  9 மணிக்கு ஸ்பைஜெட் விமானத்தில் ரஜனி  தூத்துக்குடிக்கு செல்கிறார். 

இன்று தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் ரஜினி. அப்போது அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த ரஜினியிடம், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தூத்துக்குடியில் ஏற்பட்ட கலவரத்துக்கு திமுகதான் காரணம் என்று கூறியது குறித்து கேட்கப்பட்டது.

அதற்கு அவர், "தூத்துக்குடி வன்முறைக்கு திமுகதான் காரணம் என்பது பழிபோடும் அரசியல்" என்றும், "எப்பவாச்சும் பின்னாடி பார்க்கலாம், எப்பவும் பின்னாடி பார்த்தால் வேலைக்கு ஆகாது" என்று பஞ்ச் அடித்துவிட்டு எல்லாத்துக்கும் திமுகவை குற்றம்சாட்டுவதை சுட்டி காட்டிவிட்டு செய்தியாளர்கள் சந்திப்பை முடித்துக் கொண்டார். 

click me!