தேங்காய் எண்ணெய்க்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிப்பதா.? நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் அனுப்பிய கிருஷ்ணசாமி.!

By Asianet TamilFirst Published Sep 18, 2021, 10:23 PM IST
Highlights

ஒரு கிலோவிற்குக் குறைவான பாக்கெட் தேங்காய் எண்ணெய்க்கு 18% வரிவிதிப்பு என்பது தவறானது என்று புதிய தமிழகம் நிறுவனர் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
 

இதுதொடர்பாக கிருஷ்ணசாமி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “உத்திரப்பிரதேச மாநிலம் லக்னோவில் நடந்த ஜி.எஸ்.டி. கூட்டத்தில் ஒரு கிலோவிற்கும் குறைவாகப் பாக்கெட்டுகளில் அடைக்கப்படும் தேங்காய் எண்ணெய்க்கு 18% ஜி.எஸ்.டி வரிவிதிக்க, ஜி.எஸ்.டி. கவுன்சிலில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. தேங்காய் எண்ணெய் தமிழகம் மட்டுமின்றி தென்னிந்தியா முழுவதும், பெரும்பான்மையான மக்களால் சமையலுக்கும், சருமப் பாதுகாப்பிற்கும், ஆடவர் - பெண்கள் முடி - கூந்தல் வளர்ச்சிக்கும் பெருமளவில் பயன்படுத்தப்பட்டுவருகிறது.


மக்களில் பெரும்பாலானோர் 10 கிராம் பாக்கெட் முதல் 1 கிலோ பாக்கெட் வரை மட்டுமே அதிகமாகப் பயன்படுத்துகிறார்கள். ஒரு கிலோவிற்குக் குறைவான பாக்கெட் தேங்காய் எண்ணெய்க்கு 18% வரிவிதிப்பு என்பது சாமானிய மக்களை மிகக் கடுமையாகப் பாதிக்கும். தேங்காய் எண்ணெய் உடலுக்குக் கேடு விளைவிக்கும் என்ற எண்ணம் மாறி, இப்பொழுது மக்கள் சமையலுக்கும் பயன்படுத்தத் துவங்கியிருக்கிறார்கள். விலை உயர்வின் காரணமாக, தேங்காய் எண்ணெய் பயன்பாடு குறையும்பட்சத்தில், பல்லாயிரக்கணக்கான தென்னை விவசாயிகளும் பாதிக்கப்படுவார்கள்.
மொத்தத்தில் இந்த ஒரு கிலோவிற்குக் குறைவான பாக்கெட் தேங்காய் எண்ணெய்க்கு 18% வரிவிதிப்பு என்பது தவறானது; பெரும்பான்மையான மக்களுடைய நலனுக்கு எதிரானது; விவசாயிகளுக்கும் பாதிப்பை உண்டாக்கக் கூடியது. எனவே,  நிதியமைச்சர் உடனடியாக ஒரு கிலோவிற்கும் குறைவான பாக்கெட் தேங்காய் எண்ணெய் மீதான 18% ஜி.எஸ்.டி வரிவிதிப்பை முற்றாக ரத்து செய்ய வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.” என்று கடிதத்தில் கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார். 

click me!