ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்... ஆனாலும் வெளியே வரமுடியாது..!

By vinoth kumarFirst Published Oct 22, 2019, 11:07 AM IST
Highlights

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ கைது செய்த வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு உச்சநீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. ஆனால், அதே வழக்கில் அமலாக்கத்துறை கைது செய்துள்ளதால் ஜாமீன் பெற்றாலும் சிறையில் இருந்து ப.சிதம்பரம் வர முடியாது.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ கைது செய்த வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு உச்சநீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. ஆனால், அதே வழக்கில் அமலாக்கத்துறை கைது செய்துள்ளதால் ஜாமீன் பெற்றாலும் சிறையில் இருந்து ப.சிதம்பரம் வர முடியாது.

ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம் தொடர்பாக, ப.சிதம்பரத்தை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் சிபிஐ அதிகாரிகள் கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதி கைது செய்தனர். அவர், டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் ஜாமீன் வழங்கக் கோரி, டெல்லி உயர்நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு தாக்கல் செய்திருந்தார், அவரது ஜாமீன் மனுவை உயர்நீதிமன்றம் செப்டம்பர் 30-ம் தேதி நிராகரித்து விட்டது.

இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அவரது சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுவை நீதிபதிகள் ஆர்.பானுமதி, ஏ.எஸ். போபண்ணா, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. கடந்த 18-ம் தேதி நடைபெற்ற விசாரணையின்போது, சிபிஐ தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்குதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். வழக்கு விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கப்பட்டால், அவர் சாட்சிகளைக் கலைத்து விடுவதற்கு பாய்ப்புள்ளது என்று அவர் வாதிட்டார்.

ஆனால், சிபிஐ தரப்பின் குற்றச்சாட்டுகளுக்கு சிதம்பரம் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர்கள் கபில் சிபல், அபிஷேக் சிங்வி ஆகியோர் மறுப்பு தெரிவித்தனர். இதையடுத்து, ஜாமீன் மனு மீதான தீர்ப்பை இன்று நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதில், சிபிஐ கைது செய்த வழக்கில் ப.சிதம்பரத்துக்கு உச்சநீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. ஆனால், அமலாக்கத்துறை கைது செய்துள்ளதால் ஜாமீன் பெற்றாலும் சிறையில் இருந்து ப.சிதம்பரம் வர முடியாது. குற்றப்பத்திரிகை மீதான விசாரணை நாளை மறுநாள் நடக்க உள்ள நிலையில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. மேலும், ப.சிதம்பரம் வெளிநாடு செல்ல உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்க வேண்டும் என நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

click me!