என்எல்சி நிறுவனத்தில் பயிற்றுனர்கள் தேர்வில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கு அநீதி.. திருமாவளவன் ஆவேசம்.

By Ezhilarasan BabuFirst Published Feb 9, 2021, 4:19 PM IST
Highlights

 மீதமுள்ள 96% பேர் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள். தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களின் தேர்ச்சி விகிதம் இப்படி குறைவாக இருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இதில் தமிழர்களுக்கு எதிராக திட்டமிட்ட சதி இருக்குமோ என்ற ஐயம் ஏற்படுகிறது.

என்எல்சி நிறுவனத்தில் பயிற்றுனர்கள் தேர்வில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது எனவும் உடனே பொறியாளர் தேர்வு (GET) ரத்து செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பிப்ரவரி 15 கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் விவரம்:  என்எல்சி நிறுவனத்தில் 259 பட்டதாரி நிர்வாக பயிற்றுனர்களை தேர்ந்தெடுப்பதற்கான எழுத்துப்பூர்வ தேர்வு நடைபெற்றது. அதில் 1, 582 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். தேர்ச்சி பெற்றவர்களில் 4 சதவீதம் பேர் மட்டுமே தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்.

மீதமுள்ள 96% பேர் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள். தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களின் தேர்ச்சி விகிதம் இப்படி குறைவாக இருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இதில் தமிழர்களுக்கு எதிராக திட்டமிட்ட சதி இருக்குமோ என்ற ஐயம் ஏற்படுகிறது. 

 அண்மைக் காலமாக தமிழ்நாட்டில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களில் ரயில்வே முதலான நிறுவனங்களின் பணி நியமனங்களிலும் கூட இதே போல வட மாநிலத்தவர் திட்டமிட்டு புகுத்தபடுகின்றனர். என்எல்சி நிறுவனம் என்பது மற்ற பொதுத்துறை நிறுவனங்களில் இருந்து வேறுபட்டது. இது தமிழ்நாட்டினுடைய கனிம வளங்களை எடுத்து அதிலிருந்து மின்சாரம் தயாரிக்கிறது. இதற்கான நிலங்கள் இந்த பகுதி மக்களால் வழங்கப்பட்டவை, எனவே தமிழக மக்களின் நிலங்களை கையகப்படுத்தி அவற்றிலிருந்து கனிம வளங்களை எடுத்து பயன்படுத்துகிற இந்த நிறுவனத்தின் பணிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். 

அதற்கான விதிகளை மத்திய அரசு கொடுக்க வேண்டும், அதையும் தமிழக அரசு வலியுறுத்த வேண்டும், தமிழகத்தின் வளங்களை மத்திய அரசு சுரண்டுவது மட்டுமின்றி தமிழகத்தின் வேலை வாய்ப்புகளையும், களவாடுவதற்கு நாம் அனுமதிக்க முடியாது, எனவே தற்போது நடத்தப்பட்ட தேர்வினை என்எல்சி  நிறுவனம் ரத்து செய்ய வேண்டும். தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களை பணிகளில் நியமிக்க வேண்டும், அதற்கேற்ப பணி நியமன வரையறைகளை அல்லது தேர்வு முறைகளை வகுக்க வேண்டும். என வலியுறுத்தி நெய்வேலி ஆர்ச் கேட் அருகில் எனது தலைமையில் ஒரு பிப்ரவரி 15ஆம் தேதி காலை மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதில் கூறப்பட்டுள்ளது. 
 

click me!