எம்.எம் நாரவனே லடாக்கில் உள்ள 14 கார்ப்பஸ் தலைமையகத்திற்கு அமைதி பயணம் மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வழக்கமாக ராணுவ தளபதி எல்லைப் பகுதிக்கு செல்லும்போது அதற்கான புகைப்பட ஆதாரங்கள் வெளியாவது வழக்கம், ஆனால் இந்த முறை அதுபோன்ற எந்த புகைப்படங்களும் வெளியாகவில்லை ,
இந்திய-சீன எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில் , இந்திய ராணுவ தலைவர் எம்எம் நாரவனே சர்ச்சைக்குரிய பகுதிகளில் நேரில் ஆய்வு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளன. லடாக் பகுதியில் உள்ள 14 கார்பஸ் தலைமையகத்தில் பாதுகாப்பு அதிகாரிகளுடன் அரைநாள் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன . கடந்த மே-5ஆம் தேதி பாங்கோங் த்சோ ஏரியின் வடக்குக் கரை பகுதியில் இந்திய சீன வீரர்கள் இரும்பு கம்பி மற்றும் தடிகளுடன் மோதிக் கொண்டனர் , அதில் இருதரப்பிலும் குறைந்தது 10 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்தனர் . அதேபோல் கடந்த 9-ஆம் தேதி சிக்கிமில் உள்ள நகுலா பாஸ் கால்வாய் பகுதியில் இரு நாட்டு வீரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது , இதைத்தொடர்ந்து கால்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய ராணுவ படையினர் அத்துமீறி சீன எல்லைக்குள் நுழைந்து கூடாரங்கள் அமைத்ததாக திடீரென இந்தியா மீது குற்றம் சாட்டிய சீனா, அங்கு இந்தியாவிடம் மோதலில் ஈடுபட்டது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையே பதற்றம் ஏற்பட்டதால் கால்வான் பள்ளத்தாக்கு மற்றும் பாங்கோங் த்சோ ஏரி ஆகியவற்றை ஒட்டியுள்ள பகுதிகளில் இருநாடுகளும் படைகளை குவித்து வருகின்றன.
இதற்கிடையில் இந்தியா தனது எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் வழக்கமான ரோந்து செல்வதற்குகூட சீனா இடையூறு ஏற்படுத்தி வருவதாக இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் குற்றம்சாட்டியுள்ளது . இந்நிலையில் கால்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீனா அதிக எண்ணிக்கையில் கூடாரம் அமைத்துள்ளதையடுத்து இந்தியா அந்த பகுதியில் உன்னிப்பாக கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருவதாக கூறியுள்ளது . அதேபோல் எல்லைப் பகுதியை பாதுகாப்பதில் இருநாடுகளும் தீவிரம் காட்டி வருவதன் காரணமாக வடக்கு சிக்கிமில் சில பகுதிகளிலும் இரு நாடுகளும் படைகளை குவித்து வருகிறது. இந்தியா-சீனா இடையே நீண்ட நாட்களுக்கு பின்னர் போர்மேகம் சூழ்ந்துள்ளதால் அமெரிக்கா , ஜப்பான் உள்ளிட்ட நாடுகளும் சீனாவின் நடவடிக்கைகளை கண்டித்துள்ளன . சர்வதேச அளவில் சீனா மீது கொரோனா புகார்கள் பூதாகரமாகிவரும் நிலையில் அதை திசை திருப்புவதற்காக தன் அண்டை நாடுகளுடன் போர்ப் பதற்றத்தை ஏற்படுத்த சீனா முயற்சிக்கிறது என சர்வதேச அரசியல் நோக்ககர்கள் கூறிவருகின்றனர் .
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் , சர்ச்சைக்குரிய கட்டுப்பாட்டு கோட்டு பகுதிகளில் செயல்பாடுகள் மற்றும் நிலைமைகள் குறித்து அறிய ராணுவ தளபதி எம்.எம் நாரவனே லடாக்கில் உள்ள 14 கார்ப்பஸ் தலைமையகத்திற்கு அமைதி பயணம் மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வழக்கமாக ராணுவ தளபதி எல்லைப் பகுதிக்கு செல்லும்போது அதற்கான புகைப்பட ஆதாரங்கள் வெளியாவது வழக்கம், ஆனால் இந்த முறை அதுபோன்ற எந்த புகைப்படங்களும் வெளியாகவில்லை , மேலும் ராணுவ ஜெனரல் நாரவனே எந்த ஒரு சர்ச்சைக்குரிய பகுதிகளுக்கும் செல்லவில்லை, அவர் 14 கார்ப்பஸ் தலைமையகத்தில் ராணுவ தளபதிகளுடன் அரைநாள் மட்டும் எல்லையில் நடந்துவரும் சூழல்கள் குறித்தும், தற்போதைய நிலையில் ராணுவத்தின் செயல்பாடுகள் எப்படி அமைய வேண்டும் என்பது குறித்தும், அதிகாரிகளுக்கு கட்டளைகள் பிறப்பித்ததாக கூறப்படுகிறது . ஏற்கனவே சீனா, இந்தியாவுக்கு இடையூறு செய்துவருவதற்காக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சீனாவுக்கு பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளது. அதேபோல் சீனாவும் இந்தியா தனது அத்துமீறல்களை நிறுத்திக் கொள்ள வேண்டும் இல்லை என்றால் தகுந்த விலை கொடுக்க வேண்டியிருக்கும் என மிரட்டும் தொனியில் பேசியுள்ளது. இந்த நிலையில் ராணுவ தளபதி எல்லையில் ராணுவ அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.