Fishermen: மீனவர்கள் கையில் துப்பாக்கியா? இது பொறுப்பற்ற முட்டாள்தனமாக கம்யூனிஸ்ட் பேச்சு.. விளாசும் பாஜக..!

By vinoth kumarFirst Published Dec 23, 2021, 8:02 AM IST
Highlights

தமிழக மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன் பிடிக்கும்போது, அவர்களை எல்லை தாண்டி வந்ததாகக் கூறி இலங்கை கடற்படை கற்களை வீசி தாக்குவதும், கைது செய்வதும் தொடர் கதையாகி வருகிறது. கடந்த சில மாதங்களாக கைது நடவடிக்கைகள் குறைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் இலங்கை கடற்படையின் அத்துமீறல்கள் தொடங்கியுள்ளன.

தமிழக மீனவர் துப்பாக்கி வைத்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என முத்தரசன் பேசியதற்கு பொறுப்பற்ற முட்டாள்தனமாக கம்யூனிஸ்ட் பேச்சு என பாஜக கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. 

தமிழக மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன் பிடிக்கும்போது, அவர்களை எல்லை தாண்டி வந்ததாகக் கூறி இலங்கை கடற்படை கற்களை வீசி தாக்குவதும், கைது செய்வதும் தொடர் கதையாகி வருகிறது. கடந்த சில மாதங்களாக கைது நடவடிக்கைகள் குறைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் இலங்கை கடற்படையின் அத்துமீறல்கள் தொடங்கியுள்ளன.

இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனவர்கள் இரு தினங்களுக்கு முன்னர் ஆழ்கடல் மீன்பிடிக்குச் சென்றனர். அப்போது கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம், புதுக்கோட்டை மீனவர்கள் 55 பேர் மற்றும் அவர்கள் சென்ற 8 படகுகளை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்து கைது செய்தனர். இலங்கை கடற்படையின் இந்த அத்துமீறல் ராமேஸ்வரம் மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்டுள்ள ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் மீனவர்கள் 55 பேரையும் 8 விசைப்படகுகளை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில், கோவையில் உள்ள  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகமான ஜீவா இல்லத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாநில செயலாளர் முத்தரசன்;- மத்தியில் உள்ள மோடி தலைமையிலான ஆட்சி, ஜனநாயக விரோதமான முறையில் நடைபெற்று வருகிறது. நாடாளுமன்றத்தில் பல்வேறு சட்டங்களை ஆர்.எஸ்.எஸ்சின் விருப்பத்தின் அடிப்படையில் நிறைவேற்றி வருகிறது மோடி தலைமையிலான மத்திய அரசு. வேளாண் சட்டங்களை திரும்ப பெற்ற விவகாரத்தில் மோடி பதவி விலகியிருக்க வேண்டும்.

மேலும் உலகில் எந்த மீனவர்களுக்கும் நடக்காத துன்பம் தமிழக மீனவர்களுக்கு ஏற்பட்டு வருகிறது. தமிழக மீனவர்கள் இந்திய மீனவர்களா இல்லையா ? என மத்திய அரசு விளக்கமளிக்க வேண்டும். மீனவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க முடியாத அரசாக மத்திய அரசு இருப்பதாக விமர்சித்தார். அவ்வாறு பாதுகாப்பு அளிக்க முடியாவிட்டால், தமிழக மீனவர்கள் தற்காப்பிற்காக துப்பாக்கிகள் வைத்துக்கொள்ள அனுமதியளிக்க வேண்டும் என்று முத்தரசன் கூறியிருந்தார். முத்தரசனின் பொறுப்பற்ற பேச்சுக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- தமிழக மீனவர்கள் துப்பாக்கி வைத்து கொள்ள அனுமதிக்க வேண்டும். பொறுப்பற்ற, முட்டாள்தனமான கம்யூனிஸ்ட் பேச்சு என கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

click me!