புதுச்சேரியில் தற்காலிக அரசு பணியாளர்களுக்கான ஊதியம் உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு தற்காலிக பணியாளர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
புதுச்சேரி சட்டப்பேரவையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரேசன் கடைகளில், அனைத்து ரேசன் கார்டுதாரர்களுக்கும் தலா 2 கிலோ சர்க்கரை மற்றும் 10 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்தார். இந்த அறிவிப்பு மூலம் சுமார் மூன்று லட்சத்து ஐம்பதாயிரம் ரேசன் கார்டுதாரர்களுக்கு தலா 10 கிலோ அரிசி மற்றும் 2 கிலோ சர்க்கரை இலவசமாக வழங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் புதுச்சேரியில் ஆதிதிராவிடர் மக்களுக்கு இலவச, வேட்டி சேலைக்கு பதிலாக ரூ.500 வங்கி கணக்கில் செலுத்தப்படும், தற்காலிக பணியாளர்களின் தொகுப்பு ஊதியம் ரூ.7000-த்தில் இருந்து ரூ.15,000-ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவித்தார். இந்த அறிவிப்பு தற்காலிக பணியார்கள் இடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. இதுமட்டுமின்றி புதுச்சேரியில் காலியாக உள்ள 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்றும் காவல்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.