ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அதிமுகவின் பொது செயலாளரான சசிகலா, முதலமைச்சராகி கோட்டைக்குப் போக முயன்றார். ஆனால், சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்றார். அவருக்குப் பிறகு, ஆர்.கே.நகர் மூலமாக டிடிவி தினகரனும் முதலமைச்சர் கனவில் மிதந்தார். இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டு ஜாமினில் வெளிவந்துள்ளார். தற்போது அதிமுக
அம்மா அணியின் துணை பொது செயலாளராக தினகன் இருந்து வருகிறார். தற்போது அவர்களுக்கு அதிமுகவை கைப்பற்றுவது அவர்களின் நோக்கமாக உள்ளது.
வருமான வரித்துறையின் சோதனைக்கு ஆளானது சசிகலா குடும்பம். இந்த சோதனை விவேக்கை மையமாக வைத்துதான் நடந்ததாக கூறப்படுகிறது. பரோலில் வந்த சசிகலா, தமது சொத்துக்களை உறவினர்கள் மற்றும் பினாமி பெயர்களில் பத்திரபதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் வெளிவந்துள்ளதாக தெரிகிறது. இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியா, மகன் விவேக்
ஆகியோர்களின் பெயர்களில் சொத்துக்கள் மாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இளவரசியின் மற்றொரு மகள் ஷகிலாவின் கணவர் ராஜராஜனிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர். கொடநாடு எஸ்டேட் விவகாரம், சொத்து குவிப்பு வழக்கு ஆகியவற்றை ராஜராஜன் பார்த்துக் கொண்டிருந்தார். கொடநாடு எஸ்டேட் மேலாளராக நடராஜன் இருந்தாலும் அதனைக் கண்காணித்து வந்தவர் ராஜராஜன்.
சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக பெங்களூருவுக்கும் டெல்லிக்கும் பறந்து கொண்டிருந்தவரும் ராஜராஜன்தான். இளவரசியின் குடும்பத்தார்கள், வருமான வரித்துறையின் ரெய்டில் சிக்கியுள்ளது.
விவேக், கிருஷ்ணபிரியா, ஷகிலா ஆகியோர் வருமான வரித்துறை முன்பு ஆஜராகி விளக்கம் அளித்திருந்த நிலையில், ஷகிலாவின் கணவர் ராஜராஜனும் இன்று நுங்கம்பாக்கம் வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராகினர். அவரிடம் கொடநாடு தொடர்பாக பல கேள்விகள் கேட்கப்பட்டதாகவும் அதற்ககு ராஜராஜன் விளக்கமளித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.