பொது விநியோகத் திட்டத்திற்கு உணவுப் பொருள் சப்ளை செய்யும் 3 தனியார் நிறுவனம் உள்பட 40 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
வருமான வரித்துறை சோதனை
வரி ஏய்க்கப்படுவதாக வருமான வரித்துறைக்கு வந்த புகாரின் அடிப்படையில் சென்னை மண்ணடி தம்பு செட்டி தெருவில் உள்ள அருணாச்சலம் இம்பெக்ஸ் என்ற நிறுவனத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். பருப்பு, எண்ணெய் பொருட்கள் உட்பட உணவுப் பொருட்களை ஏற்றுமதி இறக்குமதி செய்யும் நிறுவனத்தில் சோதனை நடத்திவருகின்றனர். இதே போலதண்டையார்பேட்டையில் உள்ள பெஸ்ட் டால் மில், ஏழு கிணறு தாதா முத்தையப்பன் தெருவில் உள்ள ஹீரா ட்ரேடர்ஸ், சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள இண்டகரேடட் சர்வீஸ் பிரைவேட் லிமிடேட், தண்டையார்பேட்டையில் உள்ள காமாட்சி & கோ எனும் நிறுவனத்திலும், மற்றும் உரிமையாளர்களின் வீடு தொடர்புடைய இடங்கள் என தமிழகம் முழுவதும் 40 இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
பொங்கல் தொகுப்பு வழங்கிய நிறுவனம்
இந்த சோதனையில் சிக்கியுள்ள நிறுவனங்கள் அரசின் பொது விநியோக திட்டத்திற்கு சர்க்கரை, பருப்பு, பாமாயில் உட்பட உணவுப் பொருட்களை விநியோகிக்கும் நிறுவனம் என தெரியவந்துள்ளது. இதில், அருணாச்சலம் இம்பேக்ஸ் மற்றும் இண்டகரேடட் சர்வீஸ் பிரைவேட் லிமிடேட் எனும் இரு நிறுவனங்கள் கடந்த பொங்கல் பண்டிகைக்கு தமிழக அரசு வழங்கிய பொங்கல் சிறப்பு தொகுப்பிற்கு உணவு பொருட்களை சப்ளை செய்த நிறுவனம் என கூறப்படுகிறது.பொங்கல் பண்டிகையின் போது, 1,297 கோடி ரூபாய் செலவில், 2.15 கோடி அரிசி அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது. இதில் வெல்லம், புளி உள்ளிட்ட பொருட்கள் மீது குற்றம்சாட்டப்பட்டிருத்து.
பாமாயில் இறக்குமதியில் மோசடி.?
இந்தப் பரிசுத் தொகுப்பு கொள்முதல் செய்ததில் 500 கோடி வரை முறைகேடு நடந்திருப்பதாக எதிர் கட்சிகள் குற்றம் சாட்டிய நிலையில், வருமான வரித்துறையினர் இந்த புகாரின் அடிப்படையில் சோதனை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரத்தில் இந்தியாவுக்கு இந்தோனேஷியாவிலிருந்து பாமாயில் எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது. இவ்வாறு இறக்குமதி செய்யப்படும் பாமாயில், விற்பனை செய்யப்படுவதில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் வந்துள்ளதாகவும், முறையான வரி கட்டாமல் பாமாயில் இறக்குமதி செய்யப்படுவதாகவும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையிலேயே சோதனை நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்