ஜெயலலிதாவின் மறைவுக்கு பின், அதிமுகவில் 2 அணிகளாக செயல்படுகிறது. இதனால், கட்சியின் சின்னத்தை எந்த அணி பயன்படுத்துவது என கடும் போட்டி நிலவி வருகிறது. இதையொட்டி வரும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட இரட்டை இலை சின்னம் முக்கியமாக கருதப்பட்டது.
இதைதொடர்ந்து இரு அணிகளும் மீண்டும் இணைவதற்கான பேச்சு வார்த்தை நடந்தது. ஆனால் சசிகலா மற்றும் டிடிவி.தினகரனை கட்சியில் இருந்து நீக்கினால், இரு அணிகளும் இணையும் என ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் நிபந்தனை வைத்தனர்.
இதற்கிடையில் டிடிவி.தினகரன், கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். பின்னர், தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுத்ததாக கைது செய்யப்பட்ட அவர், கடந்த 2 நாட்களுக்கு முன், ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.
இதைதொடர்ந்து, அதிமுகவில் இரு அணிகளும் இணையவில்லை. இதனால், கட்சியை வழி நடத்த நான் மீண்டும் இணைகிறேன் என கூறினார். இதனால், பிளவுபட்ட இரு அணிகளும் அதிர்ச்சியடைந்துள்ளன.
இதையொட்டி அமைச்சர்கள் கூட்டம் நடத்தி, டிடிவி.தினகரன் கட்சியில் இருந்து விலக்கப்பட்டுள்ளார். அவருக்கும், அதிமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என அமைச்சர் ஜெயகுமார் கூறினார்.
இந்நிலையில், டிடிவி.தினகரனை இதுவரை 29 எம்எல்ஏக்கள் சந்தித்துள்ளனர். இதனால், எடப்பாடி அணியில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
அதிமுகவில் 134 எம்எல்ஏக்கள் உள்ளனர். அதில், ஓ.பன்னீர்செல்வம் அணியில் 12 எம்எல்ஏக்கள் உள்ளனர். எடப்பாடி அணியில் 122 எம்எல்ஏக்களை தக்க வைத்து ஆட்சி நடத்தி வருகிறார். இதற்கிடையில், எம்எல்ஏக்கள் டிடிவி.தினகரனை சந்தித்து வருவதால், ஆட்சி கவிழும் என்ற பரபரப்புபேச்சு எழுந்துள்ளது.
இதையடுத்து, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அனைத்து மாவட்ட எம்எல்ஏக்களையும் சந்தித்து பேசி வருகிறார். இன்று தலைமை செயலகத்தில் 7 மாவட்டத்தை சேர்ந்த எம்எல்ஏக்களை சந்தித்து பேசி வருகிறார்.
ஏற்கனவே தோப்பு வெங்கடாசலம் அமைச்சர் பதவி கேட்டு, தனி அணி உருவாக்கினார். அவரிடம் சமரசம் பேசி, ஆட்சி நடத்தி வந்தனர். இந்த வேளையில் டிடிவி.தினகரனை எம்எல்ஏக்கள் சந்தித்து வருவதால், அதிமுகவில் 3வது அணி உருவாகிவிட்டது என அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.