இந்து இனமே.. சாதி அழிந்தால் நீங்கள் அழிவீர்கள்.. சாதி கட்டமைப்பை காப்பாற்றுங்கள்.. தெறிக்க விட்ட நித்தியானந்தா

By Ezhilarasan BabuFirst Published Nov 29, 2021, 5:09 PM IST
Highlights

Nithyanandha : சாதி ஒழிப்பு, சமஸ்கிருத ஒழிப்பு, பிராமண ஒழிப்பு இது எல்லாமே இந்து மதத்தை ஒழிக்க செய்யுப் வேலை, எனவே இந்து மக்களே நீங்கள் விழித்துக் கொள்ளுங்கள். உலகத்திலேயே மூத்தது மட்டுமல்லாது இன்றும் உயிரோடு இருக்கிற ஒரே இனம் இந்து  இனம்தான்.

நம் முன்னோர்கள் வகுத்துத் தந்த சாதிக் கட்டமைப்பை நாம் பாதுகாக்க வேண்டும், சாதிக் கட்டமைப்பை ஒழிக்க வேண்டும் என்று பேசுபவர்கள் அனைவரும் இந்து விரோத சக்திகளே என நித்தியானந்தா கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

பாலியல் வழக்கில் சிக்கி சின்னாபின்னமான நித்யானந்தா தமிழகத்தை விட்டு  ஓடி, இல்லை இந்தியாவை விட்டே ஓடி தலைமறைவாகியுள்ளார். தற்போது அவர் கைலாசம் என்னும் நாட்டில் இருப்பதாக கூறி வருகிறார். அந்நாட்டின் அதிபரும் தான்தான் என்றும் அடிக்கடி வீடியோ வெளியிட்டு, இந்து தர்மத்தையும் இந்து மதத்தையும் காப்பதற்காக அந்த நாட்டை உருவாக்கி இருப்பதாகவும் அவர் கூறி வருகிறார். ஆனால் உண்மையில் அவர் எங்கு இருக்கிறார்  என்பதை யாராலும் உறுதி செய்ய முடியவில்லை. நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் புதியபுதிய கெட்டப்புகளில் தோன்றி பக்தர்களிடம் சத்சங்கம் நடத்திவருகிறார் அவர். சமீபத்தில் நவராத்திரியின்போது அவர் நடத்திய போட்டோ சூட் பேஸ்புக்கில் பகிர்ந்தார். அது சமூக வலைத்தளத்தில் வைரலானது. இப்படி ஏகப்பட்ட அலப்பறைகளை  செய்துவரும் நித்தியானந்தா பேசி வெளியிட்டுவரும் வீடியோக்கள் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது. பலர் அவைகளை நகைச்சுவையாக பார்த்து ரசிக்கின்றனர். ஆனால் இன்னும் பலர் அவர் கூறும் கருத்துக்களை ஆமோதித்து வருகின்றனர்.

இந்நிலையில் அவர் பேசி வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாக உள்ளது. அதாவது நாட்டில் உள்ள சாதிக் கட்டமைப்பை அனைவரும் பாதுகாக்க வேண்டும், மனிதச் சமூகம் சிறப்பதற்காகவே இந்த சாதியக்கட்டமைப்பை முன்னோர்கள் உருவாக்கி வைத்துள்ளனர் என்றும், அதை எவரும் சீர்குலைக்க நாம் அனுமதிக்கக்கூடாது என்றும், சாதி கட்டமைப்பு சீர்குலைந்தால் இந்து மதம் அழிந்துவிடும், எனவே இந்த சாதிக்கட்டமைப்பை ஒழிக்க திராவிட கும்பல்கள் தொடர்ந்து பகீரத முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இந்து மக்கள் இதில் கவனமாக இருக்க வேண்டும் அவர் வலியுறுத்தி உள்ளார். மேலும் அவர் அந்த வீடியோவில் பேசி இருப்பதாவது:- நாட்டில் ஒரு புதுவித கொடுமை நடந்து கொண்டிருக்கிறது, சமூகரீதியாக சாதி பெயர்களையும் பயன்படுத்தி எல்லா சலுகைகளையும் அனுபவிக்கின்றனர், பிறகு அந்த கட்டமைப்பை உடைக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். 

உண்மையிலேயே சாதி விரோத இயக்கங்கள் எல்லாமே இந்து விரோத இயக்கங்கள்தான். சமஸ்கிருத விரோதம், சாதி விரோதம், பிராமண விரோதம் இது எல்லாமே இந்துமத விரோதிகள் போட்டுக் கொள்கிற வேறு வேறு முகமூடிகள். நான் ஒன்றை தெளிவாக கூறிக்கொள்கிறேன், சாதி சார்ந்த சமூக ஏற்றத்தாழ்வுகளை சரி செய்ய வேண்டும் அதில் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை, நானே எல்லா சாதியினருக்கும் சந்நியாசம் கொடுத்துக் கொண்டிருக்கிறேன். எங்களுடைய கைலாசத்தை பொறுத்தவரையில் எங்களிடம் வருபவர்களுக்கு நாங்கள் சாதியையே கேட்பதில்லை. என்னுடைய சங்கத்தில் சாதி சார்ந்த எந்த முடிவையும் நாங்கள் எடுப்பதில்லை. நான் சொல்வதை நன்றாக புரிந்து கொள்ளுங்கள், சமூக சமத்துவம் என்பது வேறு, இந்து மதத்தின் ஒரு மிகப்பெரிய அறிவார்ந்த அறிவியலை வேரோடு அறுப்பது என்பது வேறு. இந்து மதத்தின் மிகப்பெரிய அறிவார்ந்த அறிவியல்தான் சாதிக்கட்டமைப்பு.  மூடத்தனமாக அந்த அறிவார்ந்த அறிவியலின் ஆணி வேரை அறுத்து விட்டு இந்துக்களே வாழ்வை இழக்காதீர்கள். 

அதேபோல் தமிழ் கும்பாபிஷேக குருக்கள் எல்லாம் இந்துக்கள் கிடையாது. அவர்கள் இந்து மதத்தை நேசிப்பவர்கள் கிடையாது, அவர்களெல்லாம் வெறும் முகமூடியை பயன்படுத்திவிட்டு இந்து மதத்தை அழிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருபவர்கள். நான் இதை ஏற்கனவே எச்சரித்திருக்கிறேன். தமிழில் கும்பாபிஷேகம் செய்பவர்கள் நெற்றி நிறைய விபூதி பூசிக்கொண்டு உண்மையில் கோவிலில் பூசைசெய்து சிவனை வலம் வந்து விடப் போகிறார்களா? அவர்களுடைய விருப்பம் தமிழ் மொழியில் கும்பாபிஷேகம் செய்வது அல்ல, பாரம்பரியமாக இருக்கிற இந்து மதத்தை அழிக்க வேண்டும் என்பதுதான். சாதி ஒழிப்பு, சமஸ்கிருத ஒழிப்பு, பிராமண ஒழிப்பு இது எல்லாமே இந்து மதத்தை ஒழிக்க செய்யுப் வேலை, எனவே இந்து மக்களே நீங்கள் விழித்துக் கொள்ளுங்கள். உலகத்திலேயே மூத்தது மட்டுமல்லாது இன்றும் உயிரோடு இருக்கிற ஒரே இனம் இந்து  இனம்தான்.

நம் முன்னோர்கள் செய்து வைத்த சமூக கட்டமைப்பு சாதி,  மிகுந்த கவனத்துடன் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் ஆராய்ந்து அறிந்து அது உருவாக்கப்பட்டுள்ளது எந்த விதமான தனிப்பட்ட சுகங்கள் இல்லாத, நேர்மையான தியாகிகள் உருவாக்கி வைத்தது இந்த மதம். இந்த சாதிக்கட்டமைப்பை தயவுசெய்து மூட்டைப் பூச்சிக்கு பயந்து வீட்டைக் கொளுத்துவது போல இந்த கட்டமைப்பை உடைத்து விடக் கூடாது. சாதிக் கட்டமைப்பை அழிப்பது மிகப்பெரிய வரலாற்றுப் பிழை ஆகும் என அவர் இந்து மக்களை எச்சரித்துள்ளார். 

 

click me!