மண்ணில் என் பவனியை தடை செய்தால், நான் விண்ணில் பவனி வருவேன்... என்கிற கேப்சனுடன் மேகத்தில் காட்சியளிக்கும் புகைப்படத்தை பலரும் சமூக வலைதளங்களில் பகிந்து வருகின்றனர்.
விநாயகர் சதுர்த்தி விழாவைக் கொண்டாடப் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி, பொது இடங்களில் விழா கொண்டாடுவதற்கும் சிலைகள் வைப்பதற்கும் அனுமதியில்லை. அதேபோல் சிலைகளை ஊர்வலமாக எடுத்து செல்லவும், சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதற்கும் அனுமதி இல்லை.
மேலும் தனி நபர்கள் தங்களது வீடுகளில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், அருகில் உள்ள நீர்நிலைகளில் தனிநபராக சென்று சிலையை கரைப்பதற்கு அனுமதிக்கப்படுவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அரசின் வழிமுறைகளை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழக அரசு எச்சரிக்கை விடுத்து உள்ளது.
கொரானா பரவல் கட்டுக்குள் இன்னும் வரவில்லை. பொது இடங்களில் மக்கள் ஒன்று கூடி கொண்டாட, ஒன்று கூடி ஊர்வலமாக செல்ல மட்டும் தான் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. அவரவர் வீடுகளில் உரிய வழிமுறைகள் பின்பற்றி சிலை வைத்து கொண்டாடலாம் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், மண்ணில் என் பவனியை தடை செய்தால், நான் விண்ணில் பவனி வருவேன்... என்கிற கேப்சனுடன் மேகத்தில் காட்சியளிக்கும் புகைப்படத்தை பலரும் சமூக வலைதளங்களில் பகிந்து வருகின்றனர். ஆனால் இந்தப்புகைப்படம் எப்போது எங்கு எடுக்கப்பட்டது என்கிற விபரங்கள் கிடைக்கவில்லை.