திமுக செய்தி தொடர்பாளர்கள் இன்று வாய் மூடி மௌனம் காப்பது ஏன்? வளர்மதி என்ற ஒரு மாணவியை கைது செய்தது நியாயமா? இது நீதியா? என்று குரலெழுப்பிய தொலைக்காட்சி இடையீட்டாளர்கள் இன்று குரலே இல்லாமல் இருப்பதற்கு காரணம் என்ன?
எதிர்க்கட்சியாக இருக்கும் போது, வளர்மதியை கைது செய்த தமிழக காவல்துறையை கண்டித்த ஸ்டாலின் அவர்கள், அவர் பொறுப்பில் இருக்கும் காவல்துறையை கண்டிப்பாரா? என பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூர் சுங்குவார்சத்திரம் அருகே செயல்பட்டு வரும் செல்போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலையான ஃபாக்ஸ்கான் தொழிற்சாலைகளில், 5ஆயிரத்துக்கும் மேற்பட் ஆண், பெண் தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இவர்களில் பெண் தொழிலாளர்கள் சாப்பிட்ட உணவு கெட்டுபோய் இருந்ததால், சுமார் 200 பெண் தொழிலாளர்களுக்கு திடீரென்று வாந்தி பேதி ஏற்பட்டது. இதில், பெண் ஊழியர்கள் 8 பேர் இறந்துவிட்டதாக சமூக வலைதளத்தில் வதந்தி பரப்பிய சேலம் வளர்மதி கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கு அதிமுக அரசு கைது செய்தால் ஜனநாயக விரோதம், திமுக அரசு கைது செய்தால் ஜனநாயகமா? என பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.
இது தொடர்பாக பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள முகநூல் பதிவில்;- வளர்மதி என்பவரை ஸ்ரீபெரும்புதூர் ஃபாக்ஸ்கான் நிறுவன ஊழியர் விவகாரத்தில் திமுக அரசு கைது செய்துள்ளது. 2017 மற்றும் 2018ல் இதே வளர்மதியை குண்டர் சட்டத்தில் முறையே நெடுவாசல் மற்றும் சேலம் எட்டுவழி சாலை விவகாரத்தில் மக்களை தூண்டி விட்டதாக கூறி அன்றைய அதிமுக அரசு கைது செய்த போது பொங்கி எழுந்த திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் அவரது கூட்டணி கட்சியினர் வளர்மதியை கைது செய்தது ஏன்? அன்று கைது செய்தது தவறு என்றால் தற்போது கைது செய்தது சரியா? அவருக்காக குரல் கொடுத்து அவரை கைது செய்ததை கண்டித்த வைகோ அவர்கள் காணாமல் போனது ஏன்?
அதிமுக அரசு கைது செய்தால் ஜனநாயக விரோதம், திமுக அரசு கைது செய்தால் ஜனநாயகமா? வளர்மதி என்பவர் நக்சல் பயிற்சி பெற்றவர் என்றும், நக்சல் பயிற்சி பெறுவதற்கு பலரை தூண்டினார் என்றும் அவர் மீது குற்றச்சாட்டுக்களை சொன்னபோது பொங்கிய திமுக செய்தி தொடர்பாளர்கள் இன்று வாய் மூடி மௌனம் காப்பது ஏன்? வளர்மதி என்ற ஒரு மாணவியை கைது செய்தது நியாயமா? இது நீதியா? என்று குரலெழுப்பிய தொலைக்காட்சி இடையீட்டாளர்கள் இன்று குரலே இல்லாமல் இருப்பதற்கு காரணம் என்ன? அன்று அவரின் கைது குறித்து விவாதம் செய்த தொலைக்காட்சிகள் இன்று மறந்து போனதன் மர்மம் என்ன?
எதிர்க்கட்சியாக இருக்கும் போது, வளர்மதியை கைது செய்த தமிழக காவல்துறையை கண்டித்த ஸ்டாலின் அவர்கள் இன்று அவர் பொறுப்பில் இருக்கும் காவல்துறையை கண்டிப்பாரா? எதிர்க்கட்சியாக இருக்கும் போது அரசுக்கு எதிராக செயல்பட்டவரை ஆதரிப்பதும், ஆளும்கட்சியான பிறகு அதே காரணத்திற்காக அவரை கைது செய்வதும் திமுகவின் இரட்டை நிலைப்பாட்டை வெளிப்படுத்துகிறது.
ஆனால், அன்றும், இன்றும், மக்களை தூண்டி விட்டு, சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்த முனையும் வளர்மதி போன்ற நக்சல்களின் விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை பாஜக என்றும் மாற்றிக்கொள்ளாது. அன்று செய்த தவறுக்கு இன்று திமுக வருத்தம் தெரிவிக்குமா? நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார்.