நான் நன்றாக இருக்கிறேன்...!! என்றும் உறுதியுடன் அமித்ஷா..!!

By Ezhilarasan BabuFirst Published Aug 2, 2020, 7:00 PM IST
Highlights

அதன்மூலம் அம்மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. முழு அடைப்பு மற்றும் கட்டுப்பாடுகளை தளர்த்துவது போன்றவற்றில் வழிகாட்டுதல்களை உருவாக்குவதிலும் அமித்ஷா முக்கிய பங்கு வகித்து வந்தார்.

" நான் நன்றாக இருக்கிறேன்"  ஆனால் மருத்துவர்களின் ஆலோசனையின்படி நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறேன் என அமித்ஷா  தெரிவித்துள்ளார். தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என அவர் பதிவிட்டுள்ள டுவிட்டரில்  இவ்வாறு கூறியுள்ளார். கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இதுவரை வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18 லட்சத்தை எட்டியுள்ளது. இந்த வைரஸ் அனைத்து தரப்பு மக்களையும் எந்தப் பாகுபாடுமின்றி தாக்கி வருகிறது. கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் களத்தில் முன்னணியில் உள்ள மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள், அதிகாரிகள், ஆட்சியாளர்கள், காவல்துறையினர் என அனைத்து தரப்பினரும்  கொரோனா தொற்றால் பரவலாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் நாட்டின் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.  

இந்த தகவலை அவரே தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அதில் கூறியிருப்பதாவது :- எனக்கு கொரோனா அறிகுறி இருப்பதை அறிந்து, கொரோனா பரிசோதனை செய்து கொண்டேன், பரிசோதனையில் வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதனையடுத்து தனிமைப்படுத்திக் கொண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். நான் நன்றாக இருக்கிறேன், எனது உடல்நிலை சீராக உள்ளது. ஆனால் மருத்துவர்களின் ஆலோசனையின்பேரில் நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறேன். என கூறியுள்ளார். மேலும், கடந்த சில நாட்களாக என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தங்களை தனிமைப்படுத்தி கொள்வதுடன், கொரோனா பரிசோதனை செய்துகொள்ளவேண்டும் என அமித்ஷா கேட்டுக்கொண்டுள்ளார்.

கடந்த சில மாதங்களாகவே கொரோனா வைரசுக்கு எதிரான களத்தில் அமித்ஷா சுற்றி சுழன்று பணியாற்றி வருகிறார். டெல்லியில் கொரோனா வைரஸ் வேகம் எடுத்த நிலையில், அவர் அம்மாநில முதலமைச்சருடனும், அதிகாரிகளுடனும் பல சுற்று ஆலோசனை கூட்டங்களை நடத்தி தொற்றை  கட்டுப்படுத்த உறுதியான நடவடிக்கையை எடுத்தார். அதன்மூலம் அம்மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. முழு அடைப்பு மற்றும் கட்டுப்பாடுகளை தளர்த்துவது போன்றவற்றில் வழிகாட்டுதல்களை உருவாக்குவதிலும் அமித்ஷா முக்கிய பங்கு வகித்து வந்தார். அவர் கொரோனாவுக்கு எதிராக தீவிரமாக பணியாற்றி வந்த நிலையில், அவருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மத்திய பிரதேச மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் நாளை மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.  அவருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொண்டதில்  வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதியாகியுள்ளது. இதுதொடர்பான தகவலை அவரே தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதே நேரத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா விரைவில் குணமடைய வேண்டுமென விரும்புவதாகவும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இதுவரை நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18 லட்சத்தை எட்டியுள்ளது. சனிக்கிழமை 54 ஆயிரத்து 865  பேருக்கு வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. 

இதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் 51,232 பேர் வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். சனிக்கிழமை ஒரே நாளில் 852 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக  மூன்றாவது நாளாக 54 ஆயிரத்துக்கும் அதிமாக உயர்ந்துள்ளது.  எனினும் அதிக எண்ணிக்கையிலான நோய்த்தொற்றுகள் உள்ள மற்ற மூன்று நாடுகளின் சராசரியுடன் இந்தியாவின் பாதிப்புகளை ஒப்பிட்டுப் பார்த்தால், இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான நோயாளிகள் தீவிர நிலைக்கு செல்வது தெரியவந்துள்ளது. இந்தியாவில் சராசரியாக 1.57 சதவீதத்தினர் தீவிரநிலைக்கு செல்கின்றனர். அதாவது 200 நோயாளிகளில் 3 பேரின் நிலை இந்தியாவில் தீவிரமாக உள்ளது. அமெரிக்காவில் 200 நோயாளிகளில் இரண்டு நோயாளிகளும்,  பிரேசிலில் ஒரு நோயாளியும் தீவிர நிலைக்கு தள்ளப்படுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 

 

click me!