பாமகவை இனி வழிநடத்துவேன்..! அன்புமணியின் அதிரடி ட்வீட்..! பின்னணி என்ன?

By Selva KathirFirst Published Jul 17, 2021, 11:12 AM IST
Highlights

சட்டப்பேரவை தேர்தலிலும் பாமகவிற்கு கணிசமான தொகுதிகளை கொடுத்து அவர்கள் கோரிக்கைகள் அனைத்தையும் அதிமுக நிறைவேற்றியது. அதிலும் குறிப்பாக வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு பெற்றுக் கொடுத்தது வன்னியர்கள் மத்தியில் பாமகவிற்கு அமோக ஆதரவை பெற்றுத் தந்தது.

பாமகவை இனி வழிநடத்த உள்ளதாக கூறி அக்கட்சி தொண்டர்களை மட்டும் அல்லாமல் தமிழக அரசியல் களத்தையும் அசர வைத்துள்ளார் அன்புமணி ராமதாஸ்.

பாமகவை ராமதாஸ் துவங்கி 32 ஆண்டுகள் நிறைவடைந்து 33வது ஆண்டு துவங்கியுள்ளது. இதனை ஒட்டி பாமக தொண்டர்கள், நிர்வாகிகளுக்கு ராமதாஸ் வாழ்த்து தெரிவித்திருந்தார். இதே போல் அக்கட்சியின் இளைஞர் அணித் தலைவர் அன்புமணியும் வாழ்த்து தெரிவித்திருந்தார். ஆனால் அன்புமணியின் ட்வீட் தான் சமூக வலைதளங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்தது. அதற்கு காரணம் தனது வாழ்த்துச் செய்தியில் அன்புமணி பயன்படுத்தியிருந்த வார்த்தைகள் தான். பாமக துவக்க விழா தொடர்பாக அன்புமணி வெளியிட்டிருந்த ட்வீட்டில், பாட்டாளி மக்கள் கட்சி 33-ஆவது நிறுவன நாளை கொண்டாடும் இந்த வேளையில் மருத்துவர் அய்யா அவர்களின் அடிச்சுவட்டை பின்பற்றி சமூகநீதிப்பாதையில் பயணிக்கும் பா.ம.க. நிர்வாகிகள், தொண்டர்கள், ஆதரவாளர்கள், வாக்காளர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.... நன்றிகள்!

பா.ம.க. 32 ஆண்டுகளில் மக்களுக்கு செய்த நன்மைகள் ஏராளம். ஆனாலும் நாம் இலக்கை அடைய செல்ல வேண்டிய தொலைவு அதிகம். அதற்கேற்ப நமது பயணத்தின் வேகத்தை விரைவுபடுத்துவோம். அய்யாவின் கனவை நனவாக்க நான் உங்களை வழி நடத்துவேன். இனி வெற்றி நமதே! இவ்வாறு அந்த ட்வீட்டில் அன்புமணி கூறியிருந்தார். அதாவது பாமக தொண்டர்களை வழிநடத்த உள்ளதாக அன்புமணி தெரிவித்துள்ளார். பாமக தொண்டர்கள் என்றால் கட்சியையும் தான் என்கிறார்கள். பாமக தலைவராக ஜி.கே.மணி இருந்தாலும் அரசியல் ரீதியான முடிவுகளை நிறுவனர் ராமதாஸ் எடுப்பது தான் வழக்கம். கடந்த 2014 நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் அன்புமணி முன்னெடுப்பில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக இடம்பெற்றது.

இதே போல் கடந்த 2016 சட்டமன்ற தேர்தலை அன்புமணியை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்து பாமக எதிர்கொண்டது. இந்த இரண்டு நிலைப்பாடுகள் தான் தற்போது பாமகவை வலுவான நிலையில் வைத்திருக்க முக்கிய காரணம் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். காரணம் கடந்த 2014ல் திமுக மற்றும் அதிமுகவிற்கு மாற்றாக அமைந்த தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்ற கூட்டணி கட்சிகளில் பாமக மட்டுமே ஒரு இடத்தில் வென்றது. அதுவும் அன்புமணி தருமபுரியில் வெற்றி பெற்றார். இதே போல் 2016 தேர்தலில் தனித்து களம் இறங்கி கணிசமான வாக்குகளை பாமக பெற்றது. இதனை அடுத்தே கடந்த 2019 தேர்தலில் பாமகவை தேடிச் சென்று அதிமுக கூட்டணி வைத்தது.

இதே போல் சட்டப்பேரவை தேர்தலிலும் பாமகவிற்கு கணிசமான தொகுதிகளை கொடுத்து அவர்கள் கோரிக்கைகள் அனைத்தையும் அதிமுக நிறைவேற்றியது. அதிலும் குறிப்பாக வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு பெற்றுக் கொடுத்தது வன்னியர்கள் மத்தியில் பாமகவிற்கு அமோக ஆதரவை பெற்றுத் தந்தது. இது தேர்தலிலும் எதிரொலித்தது. ஆனால் கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியின் மீது மக்களுக்கு இருந்த சலிப்பு தோல்வியை பெற்றுத் தந்தது. இந்த நிலையில் தான் பாமகவை வழிநடத்தும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார் அன்புமணி. சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு பாமகவில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன.

ஊடகங்களை ஒருங்கிணைக்க தனி டீம், சமூக வலைதளங்களில் செயல்பாடுகளை அதிகரிக்க டீம் என்பதோடு மட்டும் அல்லாமல் இதற்கு முன்பு போல் இல்லாமல் செய்தியாளர்கள், செய்தி ஆசிரியர்களோடும் பாமக தலைமை நேரடியான தொடர்புக்கு வந்துள்ளது. இதற்கு வசதியாக பல்வேறு நிர்வாகிகள் நியமனம் மற்றும் மாற்றமும் நடந்துள்ளது. அந்த வகையில் அன்புமணி ராமதாஸ் விரைவில் பாமக நிறுவனர் ராமதாஸை தாண்டியும் அரசியல் செயல்பாடுகள், போராட்டங்களில் களம் இறங்க உள்ளதாகவும் அதற்கு முன்னோட்டம் தான் இந்த வழிநடத்துவேன் ட்வீட் என்கிறார்கள்.

click me!