ஒரு பக்கம் பாஜக – அமமுக பேச்சுவார்த்தை மறைமுகமாக நடைபெற்று வரும் நிலையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தற்போது மனக்கஷ்டத்தில் இருப்பதாக கூறியுள்ள டிடிவி தினகரன் அவர் மறுபடியும் எங்களுடன் வர வேண்டும் என்கிற ரீதியில் பேசியிருப்பது அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு பக்கம் பாஜக – அமமுக பேச்சுவார்த்தை மறைமுகமாக நடைபெற்று வரும் நிலையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தற்போது மனக்கஷ்டத்தில் இருப்பதாக கூறியுள்ள டிடிவி தினகரன் அவர் மறுபடியும் எங்களுடன் வர வேண்டும் என்கிற ரீதியில் பேசியிருப்பது அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
சசிகலா குடும்பத்திற்கு எதிராக தர்மயுத்தம் நடத்தி அதிமுகவை இரண்டாக உடைத்தவர் ஓபிஎஸ். அந்த சமயத்தில் அதிமுக துணைப் பொதுச் செயலாளராக இருந்து கட்சியை காப்பாற்ற முயற்சித்தவர் டிடிவி தினகரன். இருவருக்கும் இடையே மோதல் உச்சத்தில் இருந்த சமயத்தில் ஒரு சமாதானப்பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஓபிஎஸ் – டிடிவிக்கு பொதுவான நண்பர் ஒருவர் வீட்டில் ஓபிஎஸ் அழைப்பில் இந்த பேச்சுவார்த்தை ஏற்பாடு செய்யப்பட்டது. மிக மிக ரகசியமாக நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையை ஒரு கட்டத்தில் தினகரன் அம்பலப்படுத்தியதால் தமிழக அரசியலில் மிகப்பெரிய சலசலப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் பிறகு அதிமுக இணைந்தது, ஓபிஎஸ் துணை முதலமைச்சரானது, தினகரன் அமமுகவை தொடங்கியது என தமிழக அரசியல் களம் பல்வேறு திருப்பங்களை சந்தித்தது. இவற்றுக்கு எல்லாம் உச்சமாக சசிகலா சிறையில் இருந்து விடுதலையான பிறகு அவரை மறுபடியும் அதிமுகவில் இணைப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இது ஒருபுறம் நடந்து கொண்டிருக்க அமமுகவை அதிமுக கூட்டணிக்குள் கொண்டு வர பாஜக முயற்சி செய்து வருகிறது. அதே சமயம் டிடிவி தினகரனோ அதிமுகவை கலகலக்க வைக்க என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ? அதை செய்து வருகிறார்.
அந்த வகையில் திடீரென ஓபிஎஸ் மீது கரிசனம் காட்டுவது போல் ஒரு பேட்டியை கொடுத்துள்ளார். ஓபிஎஸ் தற்போது மனக்கஷ்டத்தில் இருப்பது தனக்கு தெரியும் என்றும் அவர் தங்களுடன் வந்தால் மறுபடியும் அவர் முதலமைச்சர் ஆகலாம் என்பது போல் தினகரன் பேட்டி கொடுத்துள்ளார். இதற்கு முன்பு இதே பாணியில் தினகரன் பேசிய போது அதற்கு ஓபிஎஸ் தரப்பில் இருந்து கடுமையான பதிலடி கொடுக்கப்படும். ஆனால் தினகரன் இப்படி தற்போது பேசியுள்ள நிலையில் ஓபிஎஸ் தரப்பு மவுனம் காத்து வருகிறது. அதிமுகவில் இருந்து சசிகலா நீக்கப்பட மிக முக்கிய காரணம் ஓபிஎஸ்.
அப்படி இருக்கையில் அவருக்கு ஆதரவாக டிடிவி தற்போது பேசியுள்ளதன் பின்னணியில் அவரது ரகசிய திட்டம் உள்ளதாக சொல்கிறார்கள். அதிமுகவில் இருந்து அணி அணியாக நிர்வாகிகள் வந்து சசிகலாவை சந்திப்பார்கள் என்று காத்திருந்தவர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமே கிடைத்தது. இதனால் தற்போது அதிமுகவில் கலகத்தை ஏற்படுத்தி குளிர்காய டிடிவி திட்டமிட்டுள்ளதாக கூறுகிறார்கள். ஏற்கனவே அதிமுகவின் உத்தேச வேட்பாளர் பட்டியல் என்று ஒன்று வெளியாகி அந்த கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியது. இதன் பின்னணியில் அமமுகவின் ஐடி விங்க் இருப்பதாக சொல்லப்பட்டது.
தற்போது இதே பாணியில் எடப்பாடி – ஓபிஎஸ் இடையே உள்ள கருத்து வேறுபாட்டை அதிகரிக்க வைக்க டிடிவி தினகரன் காய் நகர்த்துவதாக சொல்கிறார்கள். எப்படி ஓபிஎஸ்சை வைத்து அதிமுகவில் இருந்து தங்களை விரட்டினார்களோ? அதே ஓபிஎஸ்சை வைத்து அதிமுகவை மறுபடியும் கைப்பற்ற திட்டமிட்டு வருவதாக கூறுகிறார்கள். அதனால் தான் டாக்டர் நமது எம்ஜிஆர் நாளிதழிலில் கூட தற்போதெல்லாம் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகவே எழுதப்படுகிறது. ஓபிஎஸ்சுக்கு எதிராக எதுவும் எழுதப்படவில்லை. அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்துவது மட்டுமே தற்போதைக்கு கட்சியை தங்கள் கட்டுப்பாட்டில் எடுக்க உதவும் என்கிற வியூகம் தான் ஓபிஎஸ் தொடர்பான டிடிவியின் கரிசனமான வார்தைகளுக்கு காரணமாம்.