மதத்தை வைத்து அரசியல் நடத்துபவர்களுக்கு பதில் சொல்ல எனக்கு நேரமே இல்ல.. பாஜகவை மறைமுகமாக சாடிய ஸ்டாலின்!

Published : May 24, 2022, 09:07 PM IST
மதத்தை வைத்து அரசியல் நடத்துபவர்களுக்கு பதில் சொல்ல எனக்கு நேரமே இல்ல.. பாஜகவை மறைமுகமாக சாடிய ஸ்டாலின்!

சுருக்கம்

மதத்தை வைத்து அரசியல் நடத்துபவர்கள் - நியாயமாக இதை ஆதரித்திருக்க வேண்டும். மாறாக திசை திருப்புகிறார்கள். பொய்யான அவதூறுகளைச் சொல்கிறார்கள். ஆட்சியின் மீது அவதூறுகளைக் கிளப்புகிறார்கள்.

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம், அன்னை தமிழில் அர்ச்சனை போன்ற திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. உண்மையான ஆன்மிகவாதிகள் திமுகவைதான் ஆதரிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் ஆத்தூரில் திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்று பேசினார். அப்போது அவர் பேசுகையில், “சேலம் மாவட்டத்தின் இரண்டாவது பெரிய நகரம் ஆத்தூர்தான். இது கோட்டையும் கோயிலும் அமைந்த ஊர். இந்த ஊரில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அதிமுக ஆட்சியில் ஒரே ஒரு முறைதான் ஜூன் மாதம் மேட்டூர் அணை திறக்கப்பட்டது. ஆனால்ம், திமுக ஆட்சியில் கடந்த ஆண்டு சரியாக ஜூன் மாதம் மேட்டூர் அணை திறக்கப்பட்டது. இயற்கை திமுக ஆட்சிக்கு கொடுத்த வரத்தால், இந்தாண்டு மே மாதமே மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ளது. 

கடந்த ஆண்டு அளித்த திமுக தேர்தல் அறிக்கையில் பெட்ரோல் விலை குறைக்கப்படும் என அறிவித்தோம். அதற்கு வாய்ப்பே இல்லை என்றார்கள். ஆனால், ஆட்சிக்கு வந்தவுடனே பெட்ரோல் விலையை குறைத்து காட்டியது திமுக அரசு. மத்திய அரசு பெட்ரோல் மீதான வரியைக் குறைக்கும் போது மாநில அரசின் வரியும் குறையும். அறநிலையத்துறையின் மூலம் கோயில்களுக்கு பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டிருக்கின்றன. இதுவரை ரூ. 2,500 கோடி மதிப்பிலான கோயில் சொத்துக்கள் திமுக ஆட்சியில் மீட்கப்பட்டுள்ளன. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம், அன்னை தமிழில் அர்ச்சனை போன்ற திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. உண்மையான ஆன்மிகவாதிகள் திமுகவைதான் ஆதரிக்க வேண்டும்.

தேர்தல் வரைக்கும்தான் திமுக தொகுதி - அதிமுக தொகுதி. தேர்தல் முடிந்துவிட்டால் அனைத்துத் தொகுதியுமே என்னுடைய தொகுதிதான். அந்த எண்ணத்தோடுத்தான் ஆட்சி நடத்தி வருகிறேன். அதனால்தான் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்களும் சேர்ந்து பாராட்டும் அரசாக திமுக அரசு உள்ளது. என்னைப் பொருத்தவரை நல்லெண்ணத்தோடு நல்லாட்சியை மக்களாகிய நீங்கள் உருவாக்கினீர்கள். உங்களுடைய நம்பிக்கை வீண் போகவில்லை. இவ்வளவு நன்மைகளும் நடக்க மக்கள்தான் காரணமே. அதை நிறைவேற்றிக் கொடுக்கும் கருவிதான் இங்கே நான். தமிழகத்தில் திமுக ஆட்சி மலர்ந்துவிட்டது என்று இந்தியாவில் தெரிந்தவுடன் இங்கிருந்து சென்ற நிறுவனங்கள் மீண்டும் தொழில் தொடங்க தமிழகம் வருகின்றன. 

தமிழ்நாட்டில் திமுக ஆட்சி மலர்ந்துவிட்டது என்று உலகத்துக்கே தெரிந்தவுடன் நம்மை வரவழைத்து புதியபுதிய ஒப்பந்தம் போடுகிறார்கள். இப்படி உலகமே உணர்ந்ததை - தமிழ்நாட்டில் உள்ள சிலரால் உணர முடியவில்லை என்றால் அவர்களுக்காக நான் வெட்கப்படுகிறேன். மதத்தை வைத்து அரசியல் நடத்துபவர்கள் - நியாயமாக இதை ஆதரித்திருக்க வேண்டும். மாறாக திசை திருப்புகிறார்கள். பொய்யான அவதூறுகளைச் சொல்கிறார்கள். ஆட்சியின் மீது அவதூறுகளைக் கிளப்புகிறார்கள். இந்த அவதூறுகளை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. வாழ்க வசவாளர்கள் என்று அண்ணா சொன்ன சொல்லின்படி நான் எனது இலக்கை நோக்கி நடந்துகொண்டிருக்கிறேன். யாருக்கும் பதில் சொல்லி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. மக்களுக்கு நன்மை செய்யவே எனக்கு நேரம் போதவில்லை. இதில் அவர்களுக்கு பதில் சொல்ல எங்கே நேரம் இருக்கிறது.” ” என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு அப்பாற்பட்டதா திமுக அரசு? விளாசும் இபிஎஸ்
100 பேர் கூட இல்லாத டாக்டர் ராமதாஸ் டெல்லி போராட்டம்..! ஒங்கும் அன்புமணி கை