Anwar Raja: என்னால் விலகி இருக்க முடியவில்லை தலைவா.. அன்வர் ராஜா போஸ்டரால் அதிமுகவில் சலசலப்பு..!

By vinoth kumarFirst Published Dec 24, 2021, 6:30 AM IST
Highlights

ராமநாதபுரம் மாவட்ட அதிமுகவில் எம்.ஜி.ஆர். காலம் முதல் மூத்த அரசியல்வாதியாக இருந்து வந்தவர் அன்வர் ராஜா. முன்னாள் அமைச்சர், முன்னாள் எம்.பியான இவர் அதிமுகவில் சிறுபான்மை பிரிவு மாநிலச் செயலாளராக இருந்து வந்தார். 

சமீபத்தில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மூத்த தலைவர் அன்வர் ராஜா ஒட்டியுள்ள போஸ்டரால் அதிமுகவில் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. 

ராமநாதபுரம் மாவட்ட அதிமுகவில் எம்.ஜி.ஆர். காலம் முதல் மூத்த அரசியல்வாதியாக இருந்து வந்தவர் அன்வர் ராஜா. முன்னாள் அமைச்சர், முன்னாள் எம்.பியான இவர் அதிமுகவில் சிறுபான்மை பிரிவு மாநிலச் செயலாளராக இருந்து வந்தார். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்லம் பிரிந்து தர்மயுத்தம் நடத்தியபோது, சசிகலா பக்கம் இருந்தவர். பிறகு சசிகலா சிறைக்கு போன பிறகு எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளராக மாறினார்.

நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைக்க கூடாது என அதிரடியாக கூறினார்.  எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் இரட்டை தலைமையிலான அதிமுகவில் இருந்தாலும் கூட சசிகலா ஆதரவு நிலைப்பாட்டை கொண்டவர். இதுவரை சசிகலா தொடர்பாக எந்த ஒரு விமர்சனத்தையும் இவர் முன்வைத்ததில்லை. இந்த முறை சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்றிருந்தால் நான் அடுத்த எம்ஜிஆர் என்று எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பார் என அன்வர் ராஜா பேசியதாக ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. 

இதனிடையே, கடந்த மாதம் 24ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில், தற்போது கட்சித் தலைமை வலுவாக இல்லை என்றும், அதனால் சசிகலாவை கட்சியில் சேர்க்க வேண்டும் என்றும் அன்வர் ராஜா கூறியதாகவும், அதனால் சி.வி. சண்முகம் அவரை தாக்க முற்பட்டதாகவும் செய்திகள் வெளியானது. அதேபோல், அன்வர் ராஜா தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில்;- கூட்டணி அமைப்பது, அதை செயல்படுத்துவது அதிமுக தலைமை சரிவர செயல்படவில்லை. சசிகலாவை சேர்த்திருந்தால் கூடுதலாக வெற்றியை பெற்றிருக்க முடியும் என்றும் அன்வர் ராஜா கூறியிருந்தார். தொடர்ந்து அதிமுகவுக்கு எதிராக அன்வர் ராஜா பேசிவந்த நிலையில், அவரை அதிமுகவிலிருந்து நீக்கி அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் அறிவித்தனர். விரைவில் திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியான நிலையில் இதுவரை அன்வர் ராஜா அமைதி காத்து வருகிறார். 

இந்நிலையில், வரும் டிசம்பர் 24ம் தேதி எம்.ஜி.ஆரின் 34வது ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி ராமநாதபுரம் முழுவதும் அன்வர் ராஜா சார்பில் ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டர்கள் அதிமுக தொண்டர்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது. அதில், தலைவா... கட்சியில் இருந்து என்னால் விலகியிருக்க முடியவில்லை. ஏனெனில் நான் தினமும் உன்னை நினைக்கிறேன். அதில் நான் என்னை மறக்கிறேன். தங்கள் நினைவில் வாழும் அ. அன்வர் ராஜா என்று தெரிவித்துள்ளார். 

click me!