சாதாரண பேஸ்புக் பதிவுக்காக துரத்தி கைது செய்வதா.? நல்ல முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் இப்படியா.? ராமதாஸ் ஆவேசம்!

By Asianet TamilFirst Published Dec 23, 2021, 10:18 PM IST
Highlights

தமிழ்நாட்டில் காவல்துறைக்கு நல்ல முதலமைச்சர் இருக்கிறார்; காவல்துறைக்கு நல்ல தலைமை இயக்குனர் இருக்கிறார். ஆனால், ஒரு சில தவறான அதிகாரிகளின் செயல்பாடுகளால் அரசுக்கு அவப்பெயர் ஏற்பட்டு விடக் கூடாது.

சாதாரண முகநூல் பதிவுக்காக பாட்டாளி மக்கள் கட்சித் தொண்டர் ஒருவரை கைது செய்வதா என்று தமிழக அரசை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். 

இதுதொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடலூர் மாவட்டம் பால்வாத்துண்ணான் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ். பாட்டாளி சமூக ஊடகப் பேரவையின் பொறுப்பாளராக பணியாற்றி வருகிறார். வாழ்வாதாரத்திற்காக திருப்பூரில் பணி செய்து வருகிறார். முந்தைய அதிமுக ஆட்சியின்போது ராஜேஷ் முகநூலில் அரசியல் நிகழ்வு குறித்து ஒரு பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில் யாருடைய பெயரையும் அவர் குறிப்பிடவில்லை; அதில் அவதூறும் இல்லை. இது தொடர்பாக அவர் மீது சிலர் அளித்த புகார் குறித்து முந்தைய ஆட்சியில் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அதில் ராஜேஷின் பதிவில் ஆட்சேபகரமாக எதுவும் இல்லை என்று கூறி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்போது அதே பதிவுக்காக கடலூர் மாவட்டம் புதுச்சத்திரம் காவல்துறையினர் 400 கி.மீ பயணம் செய்து திருப்பூரிலிருந்து ராஜேஷை சட்டவிரோதமாக கைது செய்து வந்து கடலூரில் சிறையில் அடைத்துள்ளனர்.

ராஜேஷ் கைது செய்யப்பட்ட விவகாரத்தில், டி.கே.பாசு வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய அனைத்து வழிகாட்டுதல்களும் மீறப்பட்டிருக்கின்றன. ஒருவரை கைது செய்வதற்கு முன் அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திருக்க வேண்டும்; காவல்துறையினர் சீருடையில் சென்று தான் கைது செய்ய வேண்டும்; கைது குறித்து சம்பந்தப்பட்டவரின் குடும்பத்தினருக்கு தெரிவிக்க வேண்டும். ஆனால், இதில் எந்த நடைமுறையையும் கடலூர் மாவட்ட காவல்துறை பின்பற்றவில்லை. புதுச்சத்திரத்தில் இருந்து வெள்ளை நிற ஸ்விப்ட் டிசையர் காரில், சாதாரண உடையில் திருப்பூர் சென்ற காவலர்கள், ராஜேசின் வீட்டுக்கு சென்று ஏதோ முகவரி கேட்டுள்ளனர். அதற்கான அவரை வெளியில் அழைத்து வந்த காவலர்கள், காரில் கட்டாயப்படுத்தி ஏற்றியுள்ளனர். அதன்பிறகு தான் அவரை கைது செய்வதாக கூறியுள்ளனர். பிடி ஆணை, முதல் தகவல் அறிக்கை உள்ளதா என்று கேட்டதற்கு எதுவுமே இல்லை என்று காவல்துறையினர் கூறியுள்ளனர். 

ஒரு சாதாரண முகநூல் பதிவுக்காக பாட்டாளி மக்கள் கட்சித் தொண்டர் ஒருவரை கைது செய்வதற்காக இவ்வளவு தூரம் பாடுபடும் கடலூர் மாவட்ட காவல்துறை மாவட்டம் முழுவதும் தங்கு தடையின்றி நடைபெறும் கஞ்சா மற்றும் கள்ளச்சாராய விற்பனையை தடுத்து நிறுத்த எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. பாட்டாளி மக்கள் கட்சியினர் மீது ஒன்றுமில்லாத விஷயங்களுக்கு எல்லாம் கடலூர் மாவட்ட காவல்துறை வழக்குப் பதிவு செய்வது இது முதல் முறையல்ல... ஏழாவது முறை. இந்த வழக்குகள் அனைத்துமே முகநூல் பதிவுகளுக்கானதுதான். இந்த பொய்வழக்குகளில் சிக்கவைக்கப்பட்ட பா.ம.க.வினரை கைது செய்ய கடலூர் காவல்துறை அதன் அனைத்து பலங்களையும் சட்டவிரோதமாக பயன்படுத்தியுள்ளது. அவற்றிலும் சில முயற்சிகளை பாட்டாளி மக்கள் கட்சியினர் சட்டரீதியாக எதிர்கொண்டு முறியடித்துள்ளனர்.

பாட்டாளி மக்கள் கட்சியினருக்கு எதிரான இந்த நடவடிக்கைகள் அனைத்திற்கும் காரணம், கடமையை சரி வர செய்யாமல், சட்டவிரோத சக்திகளுக்கு துணையாக செயல்பட்டு வரும் காவல்துறை கண்காணிப்பாளர்தான். அவரது கடமை தவறல்களையும், ஒரு சார்பு செயல்பாடுகளையும் பாட்டாளி மக்கள் கட்சி அம்பலப் படுத்தியதால்தான் அவர் இவ்வாறு பழிவாங்கும் நோக்கத்தில் நடந்து கொள்கிறார். பண்ருட்டி முந்திரி ஆலை தொழிலாளர் கோவிந்தராசு கொலை வழக்கை, தற்கொலையாக ஜோடித்து அதில் சம்பந்தப்பட்டவர்களை காப்பாற்ற அவர் முயன்றார். உயர் நீதிமன்றம் வரை சட்டப் போராட்டம் நடத்தி அதை பா.ம.க. முறியடித்தது.

சட்டம் - ஒழுங்கை சிறப்பாக செயல்படுத்தி ஓர் ஆட்சிக்கு நல்ல பெயரை வாங்கித் தருவதும் காவல்துறைதான்; மனித உரிமைகளை மதிக்காமல் செயல்பட்டு அரசுக்கு அவப்பெயரை தேடித் தருவதும் காவல்துறைதான். தமிழ்நாட்டில் காவல்துறைக்கு நல்ல முதலமைச்சர் இருக்கிறார்; காவல்துறைக்கு நல்ல தலைமை இயக்குனர் இருக்கிறார். ஆனால், ஒரு சில தவறான அதிகாரிகளின் செயல்பாடுகளால் அரசுக்கு அவப்பெயர் ஏற்பட்டு விடக் கூடாது. இது போன்ற அத்துமீறல்களை முதல்வர் முளையிலேயே கிள்ளி எறியவேண்டும். தவறு செய்த காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பாட்டாளிகள் மீது பொய் வழக்கு பதிவு செய்யப்படுவதை பொறுத்துக் கொண்டிருக்க முடியாது. தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், கடலூர் மாவட்டத்தில் மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டத்தை பா.ம.க. நடத்தும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று அறிக்கையில் ராமதாஸ் கூறியுள்ளார்.

click me!