
ஒரு கட்சி ஒரு ஆட்சி என்று நினைக்கும் பாஜக, மாநில கட்சிகளே இருக்கக் கூடாது என்று நினைப்பதாக விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் விசிக சார்பில் கூட்டாட்சிக் கோட்பாடும் நாடாளுமன்ற ஜனநாயகமும் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்தக் கருத்தரங்கில் திருமாவளவன் பேசுகையில், “தமிழக அரசு நீட் விலக்கு மசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியது. ஆனால், அவர் அதை ஏற்காமல் நிராகரித்துவிட்டார். திருப்பி அனுப்ப ஆளுநருக்கு அதிகாரம் இருக்கலாம். அந்த சட்ட மசோதாவில் ஏதேனும் திருத்தம் வேண்டும் என்றால், விளக்கம் கேட்டு அதை சரி செய்ய சொல்லியிருக்கலாம். ஆனால், அவர் இதை சட்டமாக்க முடியாது, குடியரசுத் தலைவருக்கு அனுப்ப மாட்டேன் என்று மறுப்பு தெரிவித்திருக்கிறார். அது அவருடைய அதிகாரத்தை மீறிய செயல்.
நீட் என்ற இந்த வார்த்தையில் மருத்துவக் கல்விக்கான நுழைவுத் தேர்வு என்றே இல்லை. எதற்கு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். பள்ளி படிப்புக்குக்கூட இந்த நுழைவுத் தேர்வு வரக்கூடும் அவர்களுடைய நோக்கம் 100 விழுக்காடு கல்வி பெற்றவர்களாக மக்கள் மாற்றிவிட்டால், அடிப்படை வேலைகளை செய்ய தொழிலாளர்கள் இல்லாமல் போய்விடுவார்கள் என்பதுதான். ஆகவே, திட்டமிட்டுத்தான் இந்தத் தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை திணிக்கின்றனர். தமிழகம் மட்டும்தான் மத்திய அரசு கொண்டு வந்த நீட் தேர்வுக்கு எதிராக மசோதாவை நிறைவேற்றி ஒப்புதலுக்காக போராடிக் கொண்டிருக்கிறது. வேறு எந்த மாநிலத்திலும் இது இல்லை. மாநில அரசுகளுக்கு ஒத்திசைவு பட்டியலில் இடம்பெற்றுள்ள துறைகள் தொடர்பாக சட்டம் இயற்ற அதிகாரம் உண்டா, இல்லையா?
இந்தியாவில் நாங்கள் சாதியை ஒழிப்போம், சகோதரத்துவத்தை நிலை நாட்டுவோம், அரசியலமைப்பு சட்டம் சொல்லும் சமத்துவத்தை வெல்வோம் என்று பாஜக ஆர்எஸ்எஸில் ஒருவரைப் பேச சொல்லுங்கள், நான் இந்த அரசியலை விட்டே வெளியேறுகிறேன். விடுதலை சிறுத்தைகள் கட்சியைக் கலைத்து விடுகிறேன். ஆனால், அதை அவர்கள் பேசவே மாட்டார்கள். பாஜகவின் முதல் எதிரியே இந்திய அரசியலமைப்பு சட்டம்தான். அதைச் சிதைக்கத்தான் பாஜக, ஆர்எஸ்எஸ் முயல்கின்றன. பாஜக, ஆர்எஸ்எஸ் பொறுத்தவரை மத மாற்றத்தைத் தடுத்து, காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கியை நீர்த்துப் போகச் செய்ய வேண்டும் என்பதே.
பாஜகவின் கனவு திட்டம், செயல் திட்டம் எல்லாம் என்னவென்றால் ஒரு கட்சி, ஒரு ஆட்சி என்பதுதான். இங்கே மாநில கட்சிகள் வளர்ந்து வருகிறது. ஒரு கட்சி ஒரு ஆட்சி என்று நினைக்கும் இவர்கள் மாநில கட்சிகளே இருக்கக் கூடாது என்று நினைக்கிறார்கள். ஆனால், அதை இந்த அரசியலமைப்பு சட்டம் ஒத்துக் கொள்ளாது. எனவே, இந்த அரசியலமைப்பு சட்டம் தான் பாஜகவின் முதல் எதிரி. அவர்களின் மறைமுக நோக்கமே இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைத் தூக்கி எறிவதுதான்" என்று திருமாவளவன் தெரிவித்தார்.