ஜெயலலிதாவின் அண்ணன் நான்.. சொத்தில் 50 சதவீத பங்கு கொடுக்கணும்.. சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு.!

By Asianet TamilFirst Published Jul 10, 2022, 7:06 PM IST
Highlights

ஜெயலலிதாவின் சொத்தில் தனக்கு 50 சதவீத பங்கை தர வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் கர்நாடகாவைச் சேர்ந்த வாசுதேவன் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு உள்ள சொத்துக்களுக்கு அவருடைய அண்ணன் மகனான தீபக்கும் மகளான தீபாவும் வாரிசுகள் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவுப் பிறப்பித்திருந்தது. இதன் அடிப்படையில் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லம் உள்ளிட்ட சொத்துக்கள் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. ஜெயலலிதா வீட்டை அரசு இல்லமாக மாற்ற நினைத்த அன்றைய அதிமுக அரசாலும் அந்த வீட்டை கையகப்படுத்த முடியாமல் போனது. இந்நிலையில் தன்னை ஜெயலலிதாவின் மூத்த சகோதரன் என்று சொல்லிக்கொள்ளும் வாசுதேவன் என்பவர், ஜெயலலிதா சொத்தில் பங்கு கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.

இதையும் படிங்க: எடப்பாடி பழனிசாமி எடுத்த புது அஸ்திரம்.. ஓபிஎஸ் நிலைமை பாவம்.. புலம்பும் அதிமுக ஆதரவாளர்கள்!

இதுதொடர்பாக வாசுதேவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். அந்த மனுவில், “நான் ஜெயலலிதாவின் அண்ணன்.  ஜெயலலிதாவின் தந்தை ஜெயராமின் முதல் மனைவிக்கு  பிறந்தவன் நான்.  என்னுடைய தந்தை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட வேதவள்ளி மூலம் பிறந்தவர்கள்தான் ஜெயக்குமாரும், ஜெயலலிதாவும். இவர்கள் இருவரும் என்னுடைய சகோதர, சகோதரிகள். ஜெயலலிதாவின் வாரிசுகளாக தீபாவையும் தீபக்கையும் வாரிசுகள் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவில் திருத்தம் செய்ய வேண்டும். ஜெயலலிதாவின் சொத்தில் 50 சதவீத பங்கை தனக்கு தர வேண்டும்” என்று அந்த மனுவில் வாசுதேவன் தெரிவித்திருக்கிறார்.

இதையும் படிங்க: தர்மயுத்த காலம்.. ஓபிஎஸ்ஸுடன் பயணித்ததை நினைத்து வெட்கப்படும் கே.பி. முனுசாமி!

வாசுதேவன் தற்போது கர்நாடகாவில் உள்ள வியாசராபுரத்தில் வசித்து வருகிறார். 83 வயதாகும் அவர் இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறார். தான் ஜெயலலிதாவின் சகோதரன் என்பதை உறுதிப்படுத்தும் வகையில், ஜெயலலிதாவின் தந்தை ஜெயராமிடம்  ஜீவனாம்சம் கேட்டு மைசூர் நீதிமன்றத்தில் அவருடைய தாய் ஜெயமா தொடர்ந்த வழக்கை வாசுதேவன் சுட்டிக் காட்டியுள்ளார். இந்த வழக்கில் ஜெயலலிதாவின் தாயார் வேதவள்ளி, அவருடைய சகோதர் ஜெயக்குமார் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் எதிர்மனுதாரர்களாக இருந்ததையும் மனுவில் வாசுதேவன் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ரோசம், மானம் இருக்கா.. வாழவே தகுதி இல்லாதவர் கே.பி முனுசாமி -டாராக கிழித்த கோவை செல்வராஜ்

ஏற்கனவே ஜெயலலிதாவின் மகள் என்று சிலர் கிளம்பி வந்தார்கள். அப்படி சிலர் வந்தபோதும் ஜெயலலிதாவின் ரத்த வழி வாரிசுகளாக தீபாவையும்  தீபக்கையும் உயர் நீதிமன்றம் அறிவித்தது. அதன் அடிப்படையில்தான் அவர்களிடம் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீட்டுச் சாவியை தமிழக அரசு ஒப்படைத்தது. இந்நிலையில் வாரிசு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பில் திருத்தம் கோரி வாசுதேவன் வழக்கு தொடர்ந்திருப்பது அதிமுக வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.  இந்த மனு மீதான விசாரணை விரைவில் வர உள்ளது.

click me!