’திருடி சம்பாதித்தது என்பதால் வேட்பாளர்கள் பணம் கொடுத்தால் வாங்கிக்கொள்ளுங்கள்’...சொன்னது ஐ.ஏ.எஸ்.சகாயம்தானா?...

By Muthurama LingamFirst Published Mar 23, 2019, 12:42 PM IST
Highlights

’தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் நீங்கள் ஓட்டுப்போடுவதற்காக எவ்வளவு பணம் கொடுத்தாலும் வாங்கிக்கொள்ளுங்கள். ஏனெனில் அந்தப்பணம் ஊழல் செய்து மக்களை ஏமாற்றிச் சம்பாதித்த பணம் தான்’ என்று ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்தின் பெயரில் ஒரு மீம்ஸ் வலைதளங்களில் தீயாய்ப் பரவி வருகிறது.

’தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் நீங்கள் ஓட்டுப்போடுவதற்காக எவ்வளவு பணம் கொடுத்தாலும் வாங்கிக்கொள்ளுங்கள். ஏனெனில் அந்தப்பணம் ஊழல் செய்து மக்களை ஏமாற்றிச் சம்பாதித்த பணம் தான்’ என்று ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்தின் பெயரில் ஒரு மீம்ஸ் வலைதளங்களில் தீயாய்ப் பரவி வருகிறது.

இந்நிலையில், ஐஏஎஸ் அதிகாரி சகாயம் வழிகாட்டுதலின்படி செயல்படும் மக்கள் பாதை இயக்கம் அந்த தகவலை மறுத்துள்ளதுடன், ‘மக்கள் யாரும் இதுபோன்ற வதந்திகளை நம்ப வேண்டாம்; இதுபோன்று அவதூறு பரப்புவோர்விரைவில் கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் மீது  கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, மக்கள் பாதை இயக்கம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது; ‘சமீபகாலமாக, ஐஏஎஸ் அதிகாரி சகாயத்தின் நற்புகழுக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கில், சில தீய சக்திகளால் திட்டமிட்டு சமூக வலைதளங்களில் தவறான மீம்ஸ் மற்றும் செய்திகள் பரப்பப்படுகிறது.

அந்தவகையில் சில தினங்களுக்கு முன்பு, 'வேட்பாளர் எவ்வளவு பணம் கொடுத்தாலும் பரவாயில்லை, வாங்கிக் கொள்ளுங்கள். அது அத்தனையும் அரசாங்கத்தை ஏமாற்றி, அவர்கள் திருடி ஊழல் செய்த உங்கள் பணம்தான்... ஆனால், உங்கள் ஓட்டை  நல்லவர்களுக்கு போடுங்கள். சத்தியமே செய்திருந்தாலும் ஊழல் கட்சிகளுக்கு போடாதீர்கள். தெய்வம் நல்லதுதான் செய்யும்... தண்டனை தராது... திரு சகாயம் IAS' என்று, அவர் எங்கேயும் சொல்லாத செய்தியை உண்மைக்கு புறம்பாக உள்நோக்கத்தோடு திட்டமிட்டு சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.

ஐஏஎஸ் அதிகாரி சகாயம் இதுபோன்று ஒருபோதும் சொன்னதில்லை. மாறாக, ‘நேர்மையான சமூகம் உருவாக வேண்டுமானால், மக்கள் அனைவரும் ஓட்டுக்கு பணம் வாங்காமல் நேர்மையாக வாக்களிக்க வேண்டும்’ என்றுதான் தனது ஒவ்வொரு பேட்டிகளிலும் சொல்லி வருகிறார். எனவே, அவதூறு பரப்பும் கயவர்களை உடனே கண்டறிந்து, அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.எனவே, பொதுமக்கள் யாரும் இதுபோன்ற வதந்தி செய்திகளை நம்பவும் வேண்டாம், அவைகளை பகிரவும் வேண்டாம் என்று மக்கள் பாதை இயக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்’ என, அதில் கூறப்பட்டுள்ளது.

click me!