
திருச்சி ரயில் நிலையத்தில் வரும் அசுத்தமான குடிநீரை குடிக்குமாறு ஹெச்.ராஜா தலைமையிலான குழுவினர் ரயில்வே அதிகாரியை வற்புறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச். ராஜா ரயில் பயணிகள் வசதி மேம்பாட்டுக் குழுவின் தலைவராக உள்ளார்.
அவரது தலைமையிலான குழுவினர் சென்னை செண்ட்ரல், தாம்பரம், செங்கல்பட்டு, திருச்சி, காரைக்குடி, மதுரை, ராமேஸ்வரம் ஆகிய ரயில் நிலையங்களில் பராமரிப்பு, குடிநீர் வசதி, என அனைத்தையும் ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் ஹெச்.ராஜா தலைமயிலான குழு திருச்சி ரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, 6வது நடைமேடையில் குடிநீர் குழாய் நீர் சுகாதாரமற்ற நிலையில் இருந்தது.
இதைபார்த்த குழு ரயில் நிலைய அதிகாரியை அழைத்து கண்டித்துள்ளனர். மேலும், அங்கு வரும் குடிநீரைக் குடிக்குமாறு கூறியுள்ளனர்.
அதை குடித்த அதிகாரி தண்ணீரை உடனே துப்பியுள்ளார். ஆனாலும் ஹெச்.ராஜா தலைமையிலான குழு கட்டாயப்படுத்தி குடிக்க வைத்ததாக தெரிகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.