வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் எப்படி விழுப்புரத்துக்கு வரலாம்..? ஜெயலலிதா பல்கலைக்கழக வழக்கில் வாதம்..!

By Asianet TamilFirst Published Aug 2, 2021, 9:45 PM IST
Highlights

விழுப்புரத்தில் அதிமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட டாக்டர் ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழகம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தாக்கல் செய்த வழக்கில் விளக்கம் அளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 

வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை பிரித்து விழுப்புரத்தை தலையிடமாக கொண்டு டாக்டர் ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழகம் முந்தைய அதிமுக ஆட்சியில் உருவாக்கப்பட்டது. விழுப்புரம் பழைய தாலுகா அலுவலகத்தில் தற்காலிகமாகச் செயல்பட்டு வந்த  இந்தப் பல்கலைக்கழகத்துக்கு நிரந்தர இடமும் ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் ஆட்சி மாறிய நிலையில், இந்தப் பல்கலைக்கழத்துக்கு  நிதி ஒதுக்கக் கோரியும், பதிவாளரை நியமிக்கக் கோரியும் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், “டாக்டர் ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழகத்துக்கான துணைவேந்தர் நியமிக்கப்பட்டு, பல்கலைக்கழக கட்டுமானத்துக்காக விழுப்புரத்தில் செம்மேடு கிராமத்தில் 70 ஏக்கர் நிலம் கடந்த ஆட்சியில் ஒதுக்கப்பட்டது. ஆனால், தற்போதைய அரசின் புறக்கணிப்பால் இப்பல்கலைக்கழகம் பழைய தாலுகா அலுவலகத்திலேயே செயல்படுகிறது. இப்பல்கலைக்கு இன்னும் பதிவாளர்,போதுமான பணியாளர்கள் நியமிக்கப்படவில்லை. இதனால், பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள முதுகலை மையத்தில், முதுகலை படிப்பில் சேர விண்ணப்பங்களை வரவேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இது சட்டத்தை மீறிய செயல். இந்த அறிவுப்புக்குத் தடை விதிக்க வேண்டும்” என சிவி சண்முகம் தெரிவித்திருந்தார். இந்த மனு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில்  விசாரணைக்கு வந்தது. அப்போது, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “ஜெயலலிதா பல்கலைக்கழக வரம்புக்குள் வரும் பகுதிகளில் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் படிப்புகளை வழங்க முடியாது” என வாதிட்டார். 
தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், “ஜெயலலிதா பல்கலைக்கழகம் தொடங்கிய பிறகு துணைவேந்தர் மட்டுமே நியமிக்கப்பட்டார். கட்டிடங்களும் கட்டப்படவில்லை, அடிப்படை வசதிகளும் இல்லை. அதனால், மாணவர்களின் நலன் கருதியே திருவள்ளுவர் பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டது.” என்று தெரிவித்தார். மேலும் இவ்வழக்கில் அரசின் கருத்துக்களை அறிந்து தெரிவிப்பதாகவும் சண்முகசுந்தரம் குறிப்பிட்டார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 4-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
 

click me!