கருணாநிதி உங்கள் வீட்டுக்குள் வந்து உலவினால் எப்படி இருக்கும்..? இன்ப அதிர்ச்சி கொடுக்கும் மு.க.ஸ்டாலின்..!

By Thiraviaraj RMFirst Published Oct 31, 2019, 2:37 PM IST
Highlights

நம் எல்லோருடைய உயிரோடு கலந்து உள்ளத்தில் குடிகொண்டிருக்கும் முத்தமிழறிஞர் கலைஞர், நம் இல்லத்தில் அவர் எழில்நடை காட்டி உலவினால் எப்படி இருக்கும்?

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி எழுதிய நெஞ்சுக்கு நீதி கலைஞர் டி.வி.யில் ஒளிபரப்பப்பட உள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’நம் எல்லோருடைய உயிரோடு கலந்து உள்ளத்தில் குடிகொண்டிருக்கும் முத்தமிழறிஞர் கலைஞர், நம் இல்லத்தில் அவர் எழில்நடை காட்டி உலவினால் எப்படி இருக்கும்?

நினைக்கும்போதே நெஞ்சமெல்லாம் மணக்கிறது, இனிக்கிறது அல்லவா? அதுவும், "நெஞ்சுக்கு நீதி"யே நம் கண்ணெதிரே வந்தால், எத்தனை இன்பம் தரும் என்று சற்றே எண்ணிப் பாருங்கள். புதிய பொலிவுடனும் பொருளுடனும் தகுதிமிக்க நவீனத் தரத்துடனும், தன் ஒளிபரப்பைத் தொடர்ந்து வரும் "கலைஞர் செய்திகள்" தொலைக்காட்சி வழியே, உடன்பிறப்புகளைக் காணவும் உற்சாகம் ஊட்டவும் வருகிறார், நம் உயிர்நிகர்த் தலைவர் கலைஞர் அவர்கள்.

நம்மை ஆளாக்கிய தலைவர் கலைஞர் அவர்களை ஆளாக்கிய பேரறிஞர் அண்ணா அவர்கள் வார்த்தைகளில் சொல்வதென்றால், "என்னை முழுதும் அறிந்தவர்கள்தான் கழகத்தில் இருக்கிறார்கள். அதிலே முற்றிலும் அறிந்தவர்கள் என்று சொல்லத் தக்கவர்களிலே, கலைஞர் கருணாநிதிக்கு மிகச் சிறந்த இடம் உண்டு. அவர் மூலமாக நானும் நாடும் இன்னும் நிரம்ப எதிர்பார்க்கிறோம். இப்பொழுது செய்திருக்கிற காரியங்களைப் போலப் பலமடங்கு அதிகமான காரியங்கள், அவருடைய திறமையின் மூலம் நாட்டுக்கு இன்னும் கிடைக்க வேண்டியிருக்கிறது" - இது பேரறிஞர் அண்ணாவின் திருவாக்கு.

தனது தம்பியரில் தனித்திறனும் தளும்பும் ஆற்றலும் கொண்ட தம்பியான தலைவர் கலைஞர் அவர்களை, நமக்கும் - நாட்டு மக்களுக்கும் உருவாக்கித் தந்த பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள் சொன்ன, கல்வெட்டு வார்த்தைகள் இவை. பேரறிஞர் அண்ணா மறைவதற்கு எட்டு மாதங்களுக்கு முன்னால் (3.6.1968), இந்த ஏற்றமிகு கருத்தை, கலைஞர் அவர்களின் பிறந்தநாள் விழாவின்போது குறிப்பிட்டார்.

இப்பொழுது செய்திருக்கிற காரியங்களை விட பல மடங்கு காரியங்களை, இன - மொழி உயர்வுக்கு, கலைஞர் அவர்கள் செய்வார்கள் என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் எதிர்பார்த்ததை, அவரது தம்பியான நம் தலைவர் எள்ளளவும் ஏமாற்றவில்லை. பலமடங்கு மட்டுமல்ல, பலப்பல மடங்குச் சாதனைகளைச் செய்து தனிச்சரித்திரம் படைத்தவர்தான் நம் தலைவர்.

சுதந்திர இந்தியாவின் அரசியல் வரலாற்றில் எவ்விதப் பின்புலமும் - தாங்கிப் பிடிக்கும் சக்திகளும் இல்லாமல், தான் ஏற்றுக் கொண்ட கொள்கையையும், அதனை நிலைநிறுத்துவதற்கான அயராத உழைப்பையும் மட்டுமே உறுதுணையாகக் கொண்டு 5 முறை முதலமைச்சர் ஆனவர் தலைவர் கலைஞர் அவர்கள். எண்ணற்ற குடியரசுத் தலைவர்களையும், பிரதமர்களையும் அடையாளம் கண்டு உருவாக்கிய பேராற்றலாளர். அரைநூற்றாண்டு காலம், தமிழ்நாட்டின் அரசியல் சக்கரத்தைச் சுழல வைக்கும் அச்சாணியாக இருந்தவர். சக்கர நாற்காலியில் இருந்தபடியே டெல்லி சர்க்காரைச் சுழலவைத்தவர். வாழும்போதே வண்ணமிகு வரலாறாக வாழ்ந்தவர்தான் நம்முடைய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்.

அவரது வரலாறு என்பது, தனிப்பட்ட கலைஞரின் வரலாறு மட்டுமல்ல, அவர்களது குடும்பத்தின் வரலாறு மட்டுமல்ல, கழகத்தின் வரலாறு மட்டுமல்ல, தமிழகத்தின் வரலாறு மட்டுமல்ல, தமிழினத்தின் வரலாறு மட்டுமல்ல, இந்தியாவின் வரலாறு மட்டுமல்ல, உலக வரலாறுகளுடன் தொடர்புடையதுதான் கலைஞரின் வரலாறு. அதனால்தான் அவர் மறைந்தபோது, அகில உலகமே ஆற்றாது அழுதது. உலகெங்கும் வாழும் தமிழர்கள், தங்கள் உற்றதுணையை - தோழமையை -உரிமைக்குரலை இழந்ததாக வாடினர். பன்முக ஆற்றல் கொண்ட சளையாத உழைப்பாளரான தலைவர் கலைஞர் அவர்களிடமிருந்து எடுத்துக் கொள்ளவும், உணரவும், உயரவும் எல்லோருக்கும் ஏதோ ஒன்று இருந்தது.

அவரது எழுத்துக்கள், அவரது பேச்சுக்கள், அவரது செயல்கள், விடாமுயற்சி, போராட்டக் குணம், உழைப்பு, கொள்கைப் பற்று, தளராமை, கண்துஞ்சாமை, காவல் திறன், இலக்கியம், திரை, பாடல்கள், போராட்டங்கள், வாதத் திறன், சட்டமன்றம், அமைச்சு, முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர், பிரச்சாரம், பொருளாளர், டெல்லி அரசியல், கூட்டணிகளை உருவாக்குதல், பிரதமர்களைத் தீர்மானித்தல், குடியரசுத் தலைவர்களைத் தீர்மானித்தல், மாநில சுயாட்சி, மதச்சார்பின்மை, சமூகநீதி, ஒடுக்கப்பட்டோர் நலன், பெண்கள் நலம், மாற்றுத் திறனாளிகள் நலன்,விளிம்பு நிலை மக்கள் மேம்பாடு - என அவரிடம் இருந்து ஒவ்வொருவரும் ஒன்றைக் கற்றுக் கொள்ள முடியும்.

தன்னைத் தலைவராகப் போற்றிய உடன்பிறப்புகளுக்கு மட்டுமல்ல, காலமெல்லாம் தன்னை எதிர்ப்பதினாலேயே அரசியல் வெளிச்சம் தேட முயன்றோருக்கும், கலைஞரிடம் கற்றுக்கொள்ள வேண்டியவை ஏராளம் உண்டு. எதிர்ப்போரும் ஏற்றுக்கொள்ளும் பண்புகளும் திறமைகளும் வாய்ந்த, அரசியலைக் கடந்த ஆற்றலாளர் (Statesman) நம் தலைவர் கலைஞர் அவர்கள்.

அவரே சூரியன்! அவரே வானம்! அவரே நிலம்! வானத்தின் கீழ் சூரிய ஒளியில் பச்சையம் தயாரித்த நிலத்தில் வாழ்ந்த அனைவரையும் அவர் தாங்கிப் பிடித்தார். முத்தமிழறிஞரை மிஞ்ச யாராலும் முடியுமா? முடியாது என்றாலும், அவரைப் போல முயற்சிக்க முடியும். அவரது வாழ்க்கை வரலாறுதான், அந்த முயற்சிக்கான முன்னோடியான முழுமுதல் அரிச்சுவடி.

அவர் எப்படி வாழ்ந்தார் என்பது மட்டுமல்ல, நாம் எப்படி வாழ வேண்டும் என்பதற்கான அரிச்சுவடியும் அதுதான். அந்த அரிச்சுவடிதான், தலைவர் கலைஞர் அவர்கள் எழுதிய தன்வரலாறான "நெஞ்சுக்கு நீதி" முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் வரலாற்றை எத்தனையோ பேர் எழுதி இருக்கிறார்கள். அவை எல்லாம் கலைஞரை வெளியில் இருந்து பார்த்து எழுதியது. "நெஞ்சுக்கு நீதி"தான், அவரே தன்னை உள்ளுக்குள் இருந்து பார்த்து எழுதியது.

1924 முதல் 1969 வரையிலான வரலாறு 'நெஞ்சுக்கு நீதி' முதல் பாகமாக வெளியானது. 1969 முதல் 1976 வரையிலான வரலாறு 'நெஞ்சுக்கு நீதி' இரண்டாம் பாகமாக வெளியானது. 1976 முதல் 1988 வரையிலான வரலாறு 'நெஞ்சுக்கு நீதி' மூன்றாம் பாகமாக வெளியானது. 1989 முதல் 1996 வரையிலான வரலாறு 'நெஞ்சுக்கு நீதி' நான்காம் பாகமாக வெளியானது. 1996 முதல் 1999 வரையிலான வரலாறு 'நெஞ்சுக்கு நீதி' ஐந்தாம் பாகமாக வெளியானது. 1999 முதல் 2002 வரையிலான வரலாறு 'நெஞ்சுக்கு நீதி' ஆறாம் பாகமாக வெளியானது’’ என அவர் தெரிவித்துள்ளார். 
 

click me!