ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக வெற்றி செய்திகள் வெளியாகிக்கொண்டிருந்த வேளையில் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர்.
தமிழகத்தில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. தேர்தலில் 90 சதவீத வெற்றியை திமுக பெற்றுள்ளது. தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருந்த வேளையில், சென்னையில் அண்ணா அறிவாலயத்துக்கு அதிமுக தஞ்சை மாவட்ட முன்னாள் செயலாளரும், எம்.ஜி.ஆர் மன்ற தலைவருமான தம்பி தேவரத்தினம் வந்தார். அவருடைய தலைமையில் மேலும் பல நிர்வாகிகளும் அண்ணா அறிவாலயத்துக்கு வந்தனர். அவர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து அதிமுகவில் இணைந்தனர்.
பின்னர் தம்பி தேவரத்தினம் செய்தியாளர்களைச் சந்தித்தார். “தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுகவினர் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தி.மு.கவில் இணைய இருந்தனர். ஆனால், கொரோனா காலம் என்பதால், தற்போது 9 முக்கிய நிர்வாகிகள் மட்டும் திமுகவில் இணைந்துள்ளோம். ஒரு உரையில் இரண்டு வாள் இருக்க முடியாது. அதுபோல அதிமுகவுக்கு இரண்டு தலைமை இருக்கக் கூடாது. இதுவே குழப்பத்தைத்தான் ஏற்படுத்தும் என்பதற்குச் சான்றுதான் உள்ளாட்சித் தேர்தல் முடிவு. இதை மக்கள் தெளிவாக எடுத்துக் காட்டிவிட்டார்கள்.
இந்த உள்ளாட்சித் தேர்தலில் 95 சதவீத இடங்களில் திமுக மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. நரேந்திர மோடிக்கு கட்டுப்பட்டுதான் அதிமுக இயங்கி வந்தது. அது எங்களுடைய கௌரவம் தமிழ்நாட்டின் வாழ்வாதாரத்தையும் அழிப்பதாக உள்ளது. மத்திய அரசின் மக்கள் விரோத போக்குக்கு துணைபோகாத அரசாக திமுக உள்ளது. திராவிட பண்பாடு, தமிழர் பண்பாடு, மக்கள் நல்வாழ்வு, தமிழக வளர்ச்சிக்காக பாடுபட்ட கருணாநிதி வழியில் அவருடைய புதல்வர், முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பாக தமிழகத்தை வழிநடத்துகிறார். ஆகவே, அதிமுகவிலிருந்து விலகி முதல்வர் திமுகவில் இணைத்துக் கொண்டோம்” என்று தம்பி தேவரத்தினம் தெரிவித்தார்.