சிறுபான்மை ஓட்டுகளுக்காக இந்துக்களை திட்டவேன்...!! வாய்புளித்து.. மாங்காய் புளித்து.. கொள்கை புளித்ததோ மிஸ்டர் ஸ்டாலின்...?

By Vishnu PriyaFirst Published Mar 18, 2019, 4:38 PM IST
Highlights

ஸ்டாலின் நடத்திய இந்த சென்டிமெண்ட் மற்றும் பயபக்தி நடவடிக்கைகளை கண்ட பிறகு எதிர்கட்சிகள் கேட்கின்றனர்...’ஆக, இன்றைக்கு வாய் புளித்து, மாங்காய் புளித்து, பகுத்தறிவு கொள்கையும் புளிச்சுப்போச்சோ மிஸ்டர் ஸ்டாலின்?’ என்று. தங்கள் தலைவரின் செயலுக்கு வக்காலத்து வாங்கும் தி.மு.க.வினர் ‘தளபதி நினைத்திருந்தால் இந்த போட்டோ, வீடியோக்களை வெளியே விடாமல் தவிர்த்திருக்கலாம்.

’பகுத்தறிவு என்பது இந்துக்களின் சமய நம்பிக்கையை மட்டுமே திட்டும் சித்தாந்தம்!’:- யாரோ. இந்த வாக்கியம் மிக உன்னதமாக பொருந்துவது தி.மு.க.வுக்குதான்! என்று சொல்லும் அரசியல் விமர்சகர்கள், அந்த விமர்சனத்துக்கு நீண்டு விளக்கமும் கொடுக்கின்றனர் இப்படி. 

’ஆலயத்தில் தீ மிதிப்பது காட்டுமிராண்டி செயல்! நாடாளுமன்றத்தில் காவி உடையில் பண்டாரங்களும், பரதேசிகளும் அமர்ந்திருக்கின்றன (பி.ஜே.பி.யினர்).’ இப்படியெல்லாம் திட்டியது வேறு யாருமல்ல, முத்தமிழறிஞராம் கருணாநிதிதான். தன் இலக்கிய ஆளுமையை வெளிப்படுத்தவெல்லாம் இந்துக்களின் கலாசாரத்தையும், பண்பாட்டையும், வாழ்வியலையும் சிலாகித்தவர், அரசியல் என்று வருகையில் மட்டும் அவர்களை இடித்துரைப்பார். அவரது அரசியல் வழி வந்த அவரது மகன் மு.க.ஸ்டாலினோ, அவரை விட ஒரு படி மேலே. 

அதாவது தேர்தலற்ற சாதாரண பொழுதுகளில் இந்துக்களின் மேல் பாய்ந்து பிடுங்கி, பறாண்டுவார். ’இந்து திருமணங்களில் ஓதப்படும் மந்திரங்களுக்கான அர்த்தம், அதை ஓதும் நபர்களுக்கு  கூட தெரியாது!’ என்று இஸ்லாமிய  திருமண மேடையில் நின்று பேசுவார். காரணம், சிறுபான்மை வாக்கு வங்கியின் நண்பனாக தன்னை காட்டிக் கொள்ளதான். ஆனால், தேர்தல் என்று வந்துவிட்டால் மனைவியின் அன்பு கலந்த ஆணைப்படி கோயில்களின் படியேறிடவும் தயங்கமாட்டார். 

கடந்த 2016 சட்டமன்ற தேர்தலுக்காக ‘நமக்கு நாமே’ நடந்த ஸ்டாலின் மசூதிகள் மற்றும் தேவாலயங்களுக்குள் சென்று வந்ததில் ஆச்சரியமில்லை. ஆனால் இந்து ஆலயங்களுக்குள்ளும் சென்று துளசி தீர்த்தம் வாங்கி அருந்தியதும், விபூதியிட தலை குனிந்ததும்தான் சந்தர்ப்பவாத ஆச்சரியம். அத்தோடு விட்டாரா? கூடவே ‘தி.மு.க.வில் இருப்பவர்களில் 90% பேர் இந்துக்கள்.’ என்று ஒரு ஸ்டேட்மெண்டையும் தட்டிவிட்டு வாக்குவங்கி தாகம் தீர்க்க முயன்றார். தேர்தலுக்குப் பின் மீண்டும் பகுத்தறிவு மரமேறி, இந்துக்களை உரச துவங்கியவர்....இதோ நாடாளுமன்ற தேர்தல் ஆரவாரங்கள் துவங்கிவிட்ட நிலையில் மறுபடியும் மரமிறங்கி வந்து விபூதி, குங்குமத்துக்கு குழைய துவங்கிவிட்டார்! 

தி.மு.க. சார்பாக 20 நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் 18 சட்டசபை இடைத்தேர்தல் தொகுதிகளில் போட்டியிட இருக்கும் வேட்பாளர்களின் பட்டியலை கருணாநிதி சமாதியில் கொண்டு போய் வைத்து ஸ்டாலின் வணங்கியபோதே ‘ஹும் பகுத்தறிவு பல்லைக்காட்டுதே!’ என்று விமர்சனம் எழுந்தது. அந்த பட்டியலை ராகு காலம் கழிந்து வெளியிட்டபோது அதைவிட உக்கிரமான விமர்சனங்கள் வந்து விழுந்தன. ஆனால் இதையெல்லாம் தூக்கி சாப்பிடும் விதமாக, கோபாலபுரத்தில் கருணாநிதியின் இல்லத்தில் பூஜை அலமாரியில்  இந்த பட்டியலை வைத்து ஸ்டாலின் வணங்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன. அந்த அலமாரியில் கருணாநிதியின் பெற்றோர்களான முத்துவேலர் - அஞ்சுகம் அம்மாளின் படங்களுக்கு கீழே பூஜை சாமான்கள் இருக்கின்றன, இரு வெள்ளி குத்துவிளக்குகள் ஒளி வீசுகின்றன, புது மலர்களின் அலங்காரம் பளீச்சிடுகிறது. 

அதையெல்லாம் தாண்டி ‘ஷீர்டி பாபா’வின் சிறு சிலையும் இருக்கிறது. கோமாதாவின் வெள்ளி சிலையும் இருக்கிறது. தாத்தா பாட்டியோடு இவற்றையும் சேர்ந்த்தே வணங்குகிறார் ஸ்டாலின். பொது மேடைகளில் நாத்திகத்தை வாய் வலிக்க பேசும் துரைமுருகன், ராசா போன்றோர், பாபாவை கும்பிடும் ஸ்டாலினின் முதுகுக்குப் பின்னே பவ்யமாக நிற்கிறார்கள். தமிழகத்தில் பகுத்தறிவு மற்றும் நாத்திகத்தின் கோட்டையாக பார்க்கப்பட்ட, பார்க்கப்படும் கோபாலபுரத்து கருணாநிதியின் வீட்டில் இப்படியொரு பூஜை அமைப்பு இருப்பதென்பதே பேரதிர்ச்சி! அவற்றை ‘வாழும் கலைஞர்’ என்று திராவிட கழகத்தினராலும் வாயாற புகழப்படும் ஸ்டாலின் வணங்குகிறார் என்பது அதனினும் பெரிய அதிர்ச்சி! இந்த சம்பவங்களைப் பார்த்த பிறகு, இனியாவது கி.வீரமணி ஸ்டாலினுக்கு பல்லக்கு தூக்குவதை நிறுத்துவாரா? மீறி தூக்கினால் அழகிரி மகன் வீரமணி மீது வைத்த விமர்சனம் உண்மைதான் என்பதை அவரே ஒப்புக் கொண்டதாக அர்த்தம். 

நேற்று ஸ்டாலின் நடத்திய இந்த சென்டிமெண்ட் மற்றும் பயபக்தி நடவடிக்கைகளை கண்ட பிறகு எதிர்கட்சிகள் கேட்கின்றனர்...’ஆக, இன்றைக்கு வாய் புளித்து, மாங்காய் புளித்து, பகுத்தறிவு கொள்கையும் புளிச்சுப்போச்சோ மிஸ்டர் ஸ்டாலின்?’ என்று. தங்கள் தலைவரின் செயலுக்கு வக்காலத்து வாங்கும் தி.மு.க.வினர் ‘தளபதி நினைத்திருந்தால் இந்த போட்டோ, வீடியோக்களை வெளியே விடாமல் தவிர்த்திருக்கலாம். ஆனால் அப்படி செய்யவில்லையே! விமர்சனத்தை சந்திக்கும் தைரியத்தில்தானே வெளியிட்டிருக்கிறார். 

தயாளு அம்மாளும், செல்வியும் தாங்கள் வணங்குவதற்காக அந்த  பூஜை விஷயங்களை வைத்துள்ளனர். அவர்களின் நம்பிக்கையில் தலையிட தளபதி விரும்பவில்லை. அவர் பகுத்தறிவாளர், நாத்திகர்தான்.’ என்று விளக்கம் சொல்கின்றனர். உண்மைதான் ஸ்டாலின் நினைத்திருந்தால் இந்த படங்கள் எடுக்கப்படுவதை தவிர்த்திருக்கலாம், ஆனால் அவரது எண்ணமே இந்த படங்கள், வீடியோக்கள் வெளியே வந்து இந்துக்களின் வாக்கு வங்கியை கவர் செய்ய வேண்டும் என்பதுதானே! பின் ஏன் தடுக்கப்போகிறார்?” என்று நிறுத்துகிறார்கள். என்னா போங்க தளபதி!

click me!