
நாடு முழுவதும் ஒரே சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் வரை, ஹிந்துக்கள், குறைந்தது நான்கு குழந்தைகளையாவது பெற்றுக் கொள்ள வேண்டும், என, ஹரித்வார் பாரத் மாதா மந்திர் மடாதிபதி, சுவாமி கோவிந்ததேவ் தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலம் உடுப்பியில், விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் நடந்த, 'தர்ம சன்சாத்' என்ற நிகழ்ச்சியில், உத்தரகண்ட் மாநிலம், ஹரித்வாரில் உள்ள, பாரத் மாதா மந்திர் மடாதிபதி, சுவாமி கோவிந்ததேவ் கிரிஜி மகாராஜ் பங்கேற்றுப் பேசினார்.
இந்தியாவின் பல பகுதிகளில் ஹிந்துக்களின் மக்கள் தொகை, வேகமாக குறைந்து வருகிறது. இதற்கு முன், ஹிந்துக்களின் மக்கள் தொகை குறைவாக உள்ள பகுதிகளை எல்லாம், நாம் எதிரிகளிடம் இழந்துள்ளோம்; இனியும் அந்த நிலை தொடரக் கூடாது என அவர் தெரிவித்தார்..
தற்போது இந்தியாவில் ஒரே மாதிரி சிவில் சட்டம் இல்லை. ஆனால் நாடு முழுவதும் ஒரே சிவில் சட்டம், முழுமையாக அமலாகும்வரை, ஹிந்துக்கள் அனைவரும், குறைந்தது, நான்கு குழந்தைகளையாவது பெற்றுக்கொள்ள வேண்டும் என அவர் அதிரடியாக கருத்துத் தெரிவித்தார்.
ஒரு தம்பதிக்கு, இரண்டு குழந்தைகள் என்ற கொள்கை, நாடு முழுவதும் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் பொருந்த வேண்டும் என்றும் இதை, ஹிந்துக்கள் மீது மட்டும் திணிக்கக் கூடாது என்றும் சுவாமி கோவிந்ததேவ் கிரிஜி மகாராஜ் தெரிவித்தார்.
பசு பாதுகாப்பு அமைப்பு, நல்ல விஷயங்களுக்காக செயல்படுகிறது என்றும் ஆனால், குற்றப் பின்னணி உடைய சிலர், இந்த அமைப்பின் பெயரை தவறாக பயன்படுத்தி, குற்றச் செயல்களை செய்கின்றனர் என்றும் குறிப்பிட்ட அவர் தங்கள் சொந்த பிரச்னைகளை தீர்த்துக் கொள்ள, பசு பாதுகாவலர்கள் என்ற பெயரை பயன்படுத்துகின்றனர் என்றும் குற்றம்சாட்டினார்.