தமிழகத்தில் நிர்வாக ரீதியாக ஆயிரம் பஞ்சாயத்துகள் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கும் நிலையில், வீணாக விஷால் விவகாரம் துருத்திக் கொண்டிருப்பதை சந்தேகக் கண்களுடன் பார்க்க துவங்கியுள்ளனர் விமர்சகர்கள்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் விஷால் போட்டியிட முனைந்ததையும், அடிப்படையில்லாமல் அவரது மனு நிராகரிக்கப்பட்டதெனும் குற்றச்சாட்டையும், விஷாலின் தேர்தல் முடிவுக்கு எதிராக சேரனின் உள்ளிருப்பு போராட்டத்தையும், நேற்று தயாரிப்பாளர் சங்க கூட்டத்தில் இதை மையமாக வைத்து நடந்த குழப்பங்களையும் தமிழகம் தெளிவாக கவனித்து வைத்திருக்கிறது.
விஷால் தேர்தலில் போட்டியிட முயன்றார்! அந்த முயற்சி நிராகரிக்கப்பட்டது! அவரது முயற்சியை சேரன் எதிர்த்தார்!...என்பதோடு இந்த பிரச்னை முடிக்கப்பட்டு இருந்தால் இது கவனிக்கத்தக்க ஒரு செய்தி அவ்வளவே. ஆனால் ஆர்.கே.நகரில் போட்டியாளர்களின் பட்டியல் இறுதி செய்யப்பட்டு, பிரச்சாரமே துவக்கப்பட்டுவிட்ட (இன்னும் சொல்வதானால் பணப்பட்டுவாடாவே துவக்கப்பட்டுவிட்டதாம்) பின்னரும் விஷால் பஞ்சாயத்து பெரிதாய், பெரிதாய் வளர்ந்து கொண்டே இருக்கிறதென்றால் இதன் பின்னணியில் பெரிதாய் ஒரு அரசியல் இருக்கிறதென்கிறார்கள் விமர்சகர்கள்.
இன்று நடிகர் சங்க துணைத்தலைவர் பதவியை பொன்வண்ணன் ராஜினாமா செய்திருப்பதன் மூலம் நடிகர் சங்கத்தில் அரசியல் திரி மிக அழுத்தமாக முறுக்கிவிடப்பட்டு எறிய வைக்கப்படுகிறது. பொன்வண்ணனின் ராஜினாமாவை எஸ்.வி.சேகர் வரவேற்கிறார், மனோபாலா அதிர்ச்சியடைகிறார். இப்படி அவர்களுக்குள்ளேயே ஆயிரத்தெட்டு குழப்பங்கள்.
இதையெல்லாம் சுட்டிக்காட்டும் அரசியல் பார்வையாளர்கள் பகீரென ஒரு தகவலை பகிர்கிறார்கள். அதாவது “விஷாலின் தேர்தல் போட்டி முயற்சியும், அது நிராகரிக்கப்பட்டதும் பின் அதைத்தொடர்ந்து சினிமா வட்டாரத்தை மையப்படுத்தி நடப்பவையும் முழுக்க முழுக்க அரசியலே. சினிமா வட்டாரத்தில் ஒரு சின்ன தீப்பொறி பறந்தாலும் கூட அதையே ஆர்வமாய், ஏக்கமாய் பார்த்துக் கொண்டிருக்கும் தமிழன் தன் வீடு பற்றி எரிவதை கூட பெரிதாய் அலட்டிக்க மாட்டான்.
குமரியில் மீனவர்கள் மாயமான விஷயத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் அசமந்த நடவடிக்கைகளின் மீது மக்கள் மத்தியில் ஒரு அதிருப்தி பொறி கிளம்பியிருக்கிறது. கடலில் இறங்கி போராட்டம், ஒப்பாரி போராட்டம் என்று குமரியில் கிளம்பியிருக்கும் உத்வேகம் மெதுவாக தமிழகமெங்கும் பரவ துவங்கியிருக்கிறது. கொஞ்சம் அசந்தாலும் இது ஜல்லிக்கட்டுக்கு நிகரான ஒரு மல்லுக்கட்டாய் மாறிவிடும் என்று இரு அரசுகளும் அஞ்சுகின்றன.
ஆகவே ஆதங்கத்திலிருக்கும் தமிழனை திசை திருப்பவே இப்படியொரு சினிமா சில்லறையை அள்ளி இறைத்திருக்கிறது அதிகார வட்டாரம் என்கிறார்கள். இப்போது தமிழனின் முழு கவனமும் அரிதார பேர்வழிகள் போடும் அர்த்தமில்லா சண்டையில் மூழ்கியிருக்கும், அதற்குள் கன்னியாகுமரி போராட்டங்களுக்கு சப்தமில்லாமல் ஒரு முடிவை கட்டிவிடலாம் என்பதே அதிகார மையத்தின் கணக்காம்.
ஆக சினிமா உலகுக்குள் அரசியல் தூண்டிவிட்ட இந்த கலவரத்துக்கு சேரன், தங்கர்பச்சான் போன்ற ஆக சிறந்த ஆளுமைகளும் பலிகடாவாகி மோதிக் கொண்டிருப்பதுதான் அவலம்.” என்கிறார்கள்.