ஹலோ மக்களே.. கொரோனா இன்னும் முடியலங்க.. கூட்டம் கூட்டமாக வெளியல் வருவோரை தடுக்க அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு.

By Ezhilarasan BabuFirst Published Jun 9, 2021, 12:22 PM IST
Highlights

ஊரடங்கிலிருந்து தளர்வு மட்டுமே அளிக்கப்பட்டுள்ள நிலையில், இயல்புநிலை திரும்பியதாக நினைத்து தேவையின்றி வெளியில் வருபவர்களை கட்டுப்படுத்த வேண்டுமென தமிழக அரசிற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

ஊரடங்கிலிருந்து தளர்வு மட்டுமே அளிக்கப்பட்டுள்ள நிலையில், இயல்புநிலை திரும்பியதாக நினைத்து தேவையின்றி வெளியில் வருபவர்களை கட்டுப்படுத்த வேண்டுமென தமிழக அரசிற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா காலத்தில் தெரு விலங்குகளின் உணவு, குடிநீர் தேவை குறித்து சிவா என்பவர் தொடர்ந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது.  அப்போது அரசு தாக்கல் செய்த அறிக்கையில் நாய்களுக்கு 2500 கிலோ உணவு வழங்கப்பட்டு அவற்றை வழங்க 500 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. 104 குதிரைகளுக்கு 3536 கிலோ கோதுமை வழங்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. 

விலங்குகளுக்கு உணவு வழங்குவதற்காக உருவாக்கப்பட்ட கணக்கில் 19 லட்சத்து 29 ஆயிரம் ரூபாய் இருப்பிலிருந்து, சென்னை மாநகராட்சிக்கு 7 லட்சத்து 91 ஆயிரம் ரூபாயும், பிற 14 மாநகராட்சிகளுக்கு 11 லட்சத்து 84 ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து, நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்துவதற்கான விஞ்ஞானபூர்வ மற்றும் மனிதாபிமான அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி வழக்கு விசாரணையை 3 வாரத்திற்கு தள்ளைவத்தனர். பின்னர் தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரத்திடம், ஊரடங்கில் தளர்வுகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ள நிலையில், வெளியில் நிலவும் நடைமுறைகளை பார்க்கும்போது ஊரடங்கு முழுமையாக நீக்கப்பட்டது போல பொதுமக்கள் நடந்துகொள்வதாக தெரிவதாகவும், இது  கொண்டாட்டங்களுககான நேரம் இல்லை எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர். 

அதற்கு அரசு தலைமை வழக்கறிஞர், கொரோனா முதல் அலை ஊரடங்கில் காவல்துறை மிகவும் கடுமையாக நடந்துகொண்டதால் பல இடங்களில் பிரச்சினை ஏற்பட்டதாகவும், கடுமைகாட்ட வேண்டாம் என தற்போது காவல்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதை பொதுமக்கள் சாதகமாக எடுத்துக்கொண்டது வெளியில் வருவதற்கு காரணமாக இருக்கலாம் என தெரிவித்தார். ஆனால் நீதிபதிகள், ஊரடங்கு காலத்தில்  மக்கள் கூட்டம் அதிகரிப்பதை தடுக்க வேண்டுமெனவும், மக்களுக்கு ஏற்படும் அசவுகரியங்களை குறைப்பதற்காகவே தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளதை மக்கள் உணரும் வகையிலும், வெளியில் சுற்றித்தியக்கூடாது எனவும் ஒலிபெருக்கிகள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தும்படியும் தமிழக அரசுக்கு அறிவுறுத்தினர்.
 

click me!