பட்டப் பகலில் இளைஞருக்கு சரமாரி வெட்டு.. பட்டா கத்தியுடன் ரவுடி வெறித்தனம்..

By Ezhilarasan BabuFirst Published Jun 9, 2021, 11:51 AM IST
Highlights

சென்னை வியாசர்பாடி பகுதியில் குடிபோதையில் பட்டாக் கத்தியுடன் அட்டகாசம் செய்த ரவுடியை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை வியாசர்பாடி பகுதியில் குடிபோதையில் பட்டாக் கத்தியுடன் அட்டகாசம் செய்த ரவுடியை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை மாதவரம் பொன்னியம்மன் நகரைச் சேர்ந்தவர் கருப்பசாமி (26). இவர் வியாசர்பாடி பெரியார் நகர் ராஜாங்கம் தெருவில் உள்ள எஸ்.பி ஏஜென்சிஸ் நிறுவனத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இன்று மாலை கருப்பசாமி நிறுவனத்தின் வெளியே சரக்கு வாகனத்தில் பொருட்களை ஏற்றிக் கொண்டிருந்தார். 

அப்போது எதிர்பாராத நேரத்தில் அங்கு வந்த வாலிபர் ஒருவர் தன் கையில் வைத்திருந்த பட்டாக் கத்தியால் கருப்பசாமியின் முதுகில் வெட்டிவிட்டு சரக்கு வாகனத்தின் கண்ணாடியையும் உடைத்தார். அதனைத் தொடர்ந்து அருகில் இருந்த இறைச்சிக் கடைக்குள் நுழைந்த அந்த நபர் அங்குள்ள கண்ணாடிகளை பட்டாக் கத்தியால் குத்தி உடைத்ததோடு அங்கிருந்தவர்களையும் தெருவில் நடந்து சென்றவர்களையும் பட்டாக் கத்தியைக் காட்டி மிரட்டி வந்தார். இதனையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் காவல் கட்டுப்பாட்டு அறை எண் 100க்கு அழைத்து தகவல் தெரிவிக்கவே, செம்பியம் ரோந்து காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். காவல் துறையினரை கண்டதும் பட்டாக் கத்தியுடன் மிரட்டி வந்த நபர் ஓடித் தப்ப முயன்றார். 

அப்போது பொதுமக்கள் உதவியுடன் காவல் துறையினர் அவரை வளைத்துப் பிடித்து அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அந்த நபர் அதே பகுதியைச் சேர்ந்த மகேஷ் என்பதும் குடிபோதையில் பட்டாக் கத்தியுடன் மிரட்டி பொதுமக்களை காயப்படுத்தியதும் தெரியவந்தது. இதனையடுத்து மகேஷை கைது செய்த காவல்துறையினர் அவரை செம்பியம் காவல் நிலையம் அழைத்துச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் அந்த நபர் குடிபோதையில் பட்டப்பகலில் பட்டாக் கத்தியுடன் அட்டகாசம் செய்த சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

click me!