பாஜகவில் எனக்கு வேறு புதிய பொறுப்பை கொடுப்பாங்க... இதைச் சொல்றது ஹெச். ராஜாதான்..!

By Asianet TamilFirst Published Oct 6, 2020, 8:52 PM IST
Highlights

தற்போது எனக்கு வேறு பொறுப்பை தலைமை வழங்கும். இது எங்களுடைய உட்கட்சி விவகாரம். இதுகுறித்து வேறு யாரும் கவலைபட தேவையில்லை  என்று பாஜக முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். 

புதுக்கோட்டை மாவட்டத்தில் பாஜக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அக்கட்சியின் தேசிய முன்னாள் செயலாளர் ஹெச். ராஜா பங்கேற்றார். பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். “நான் கடந்த 6 ஆண்டுகளாக பாஜக தேசிய செயலாளராக பதவியில் இருந்துவிட்டேன். தற்போது எனக்கு வேறு பொறுப்பை தலைமை வழங்கும். இது எங்களுடைய உட்கட்சி விவகாரம். இதுகுறித்து வேறு யாரும் கவலைபட தேவையில்லை. அதிமுக சார்பில் யார் முதல்வர் வேட்பாளர் என்று அறிவிப்பது அக்கட்சியின் உள்விவகாரம், அந்தப் பிரச்னையில் பாஜக தலையிடாது. ஓபிஎஸ்-இபிஎஸ் அணிகளை தான் இணைத்ததாக பிரதமர் மோடி ஒருபோதும் கூறியது இல்லை.
அய்யாக்கண்ணு போன்ற போலி விவசாயிகளை கையில் வைத்துக் கொண்டு வேளாண் சட்டத்துக்கு எதிராக திமுக போராட்டங்களை நடத்துவது வேடிக்கையானது. இது மக்களை திசைதிருப்பும் செயல். விவசாயிகளின் நலனுக்காகவே மத்திய அரசு இச்சட்டங்களை கொண்டு வந்துள்ளது. காங்கிரஸ் கட்சியால் இனி ஒருபோதும் ஆட்சிக்கு வரமுடியாது. அதனால்தான் வேளாண் சட்டத்தை நாங்கள் ஆட்சிக்கு வந்தால் குப்பையில் தூக்கி போடுவோம் என ராகுல்காந்தி கூறுகிறார். காங்கிரஸ் கட்சிக்கு முதலில் தலைவரை தேர்ந்தெடுங்கள். அதன் பிறகு ஆட்சிக்கு வருவதை பற்றி பேசலாம்.
உ.பி.யில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் கண்டனத்துக்குரியதுதான். அதில் தொடர்புடைய குற்றவாளிகளை கைதுசெய்ய அரசு உரிய நடவடிக்கை எடுத்துவிட்டது. காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அதை அரசியலாக்கி ஆதாயம் தேட முயல்கின்றன” என்று ஹெச்.ராஜா தெரிவித்தார்.

click me!