இறைச்சி மற்றும் காய்கறி அங்காடிகளை கண்காணிக்க குழுக்கள்..!! சென்னை மாநகராட்சி ஆணையர் அதிரடி..!!

By Ezhilarasan BabuFirst Published Jul 11, 2020, 5:51 PM IST
Highlights

சம்பந்தப்பட்ட மார்க்கெட்டை சார்ந்த பிரதிநிதி ஆகியோரை உள்ளடக்கிய 81 சந்தை ஒழுங்குபடுத்தும்  குழு அமைக்கப்பட்டு, சரியான முறையில் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றும் வகையில் பணிகள்  ஒருங்கிணைக்கப்படும்.

பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள காய்கனி  மளிகை கடைகள் இறைச்சி மற்றும் மீன் அங்காடிகளில் கொரோனா வைரஸ் தொற்று தடுக்கும் வகையில் பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடிப்பதை கண்காணிக்க கோட்ட உதவி பொறியாளர் தலைமையில் 81 சந்தை ஒழுங்குபடுத்தும் குழுக்களும் வட்டாட்சியர்கள் தலைமையில் 32 கண்காணிப்பு குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசால் கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்படுத்தும் வகையில், ஜூலை மாதம் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ள நிலையில் பொதுமக்களின் அத்தியாவசிய தேவை மற்றும் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் ஒரு சில பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி சில கட்டுப்பாடுகளுடன் காய் கனி அங்காடிகள் மற்றும் தொழிற்சாலைகள் இயங்க முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். அதன்படி பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இயங்கும் காய்கறி, மளிகை கடைகள், இறைச்சி, மீன் அங்காடிகள், தொழிற்சாலைகள் மற்றும் பல்வேறு கடைகள் ஆகிய இடங்களில் தமிழ்நாடு அரசு பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள பாதுகாப்பு நடைமுறைகள் சரியான முறையில் பின்பற்ற படுகின்றனவா என கண்காணிக்க பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் பல்வேறு ஆலோசனைக் கூட்டங்கள் மற்றும் விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. 

அதனடிப்படையில் பொதுமக்கள் தங்களுடைய அத்தியாவசியத் தேவைகளுக்காக நாள்தோறும் அதிகம் கூடும் இடங்களான காய்கறி அங்காடிகள், மளிகை கடைகள், இறைச்சி கடைகள் மற்றும் மீன் அங்காடிகள் ஆகிய இடங்களில் வைரஸ் தொற்று பரவுதலை தடுக்கும் வகையில் 81 சந்தை பகுதிகளில் பெருநகர சென்னை மாநகராட்சியின் கோட்ட உதவி பொறியாளர் அல்லது இளநிலை பொறியாளர்களை தலைவராகக் கொண்டு காவல்துறை அலுவலர் மீன்வளத்துறை சார்பில் மீன்வள சுகாதார ஆய்வாளர், சம்பந்தப்பட்ட மார்க்கெட்டை சார்ந்த பிரதிநிதி ஆகியோரை உள்ளடக்கிய 81 சந்தை ஒழுங்குபடுத்தும்  குழு அமைக்கப்பட்டு, சரியான முறையில் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றும் வகையில் பணிகள்  ஒருங்கிணைக்கப்படும். இந்தச் சந்தை பகுதிகளில் சரியான முறையில் சமூக இடைவெளியை கடைபிடித்தல், அனைத்து கடைகளிலும் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் பொது மக்கள் முககவசம் அணிந்து வருதலை கண்காணித்தல் மற்றும் அனைத்து கடைகளிலும் கைகளை சுத்தம் செய்ய கிருமிநாசினி வைக்கப்பட்டுள்ளதா என கண்காணித்தல் போன்றவற்றை மேற்பார்வையிட வட்டாட்சியர்கள் தலைமையில் 32 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுவில் வட்டாட்சியர், சிறப்பு வட்டாட்சியர், துணை வட்டாட்சியர்கள் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள் ஆகியோர் இடம் பெறுவார்கள். 

இந்தக் குழுவானது தங்கள் வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மார்க்கெட் மற்றும் அங்காடிகளை கண்காணித்து விதிமீறல்கள் இருப்பின் அந்த மார்க்கெட் அங்காடிகளை அபராதத்துடன் 14 நாட்களுக்கு மூடி சீல் வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அனைத்து மார்க்கெட் பகுதிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு அருகில் உள்ள காவல் நிலையத்தில் இருந்து கண்காணிக்கப்படும், சந்தை ஒழுங்குபடுத்தும் குழுவானது அந்த வார்டு உதவிப் பொறியாளர் அவர்களால் தொடர்ந்து வழிநடத்தப்படும். பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் வெளியிடப்படும் பாதுகாப்பு வழிமுறைகளை அனைத்து மார்க்கெட் மற்றும் அங்காடிகளை சார்ந்த பிரதிநிதிகள் தவறாமல் கடைபிடிக்க வேண்டும். கொரோனா வைரஸ் தொற்றைத் தடுக்கும் வகையில் உணவு விடுதிகள், ஹோட்டல்கள்,  வங்கிகள், கூட்டுறவு சங்கங்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மற்றும் பல்வேறு அங்காடிகளை சார்ந்த பிரதிநிதிகளுடன் பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் அங்காடிகளில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து விரிவான ஆலோசனை மற்றும் விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு அவர்களுக்கு விரிவான வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன என ஆணையர் பிரகாஷ் அவர்கள் தெரிவித்துள்ளார்.
 

click me!