முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என நடிகை கௌதமி பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடித்த்தில வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக நடிகை கௌதமி பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் ,நான் இந்த கடிதத்தை ஒரு சாதாரண இந்திய குடிமகள் என்ற முறையில் எழுதுகிறேன்.நான் ஒரு குடும்பத் தலைவி,தாய் மற்றும் பணிக்கு செல்லக்கூடிய ஒரு பெண். என குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் அதிர்ச்சிகரமாக மரணமடைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் கோடிக்கணக்கான நபர்களில் நானும் ஒருத்தி.அவர் சிறந்த இந்திய அரசியல் தலைவர் மட்டுமல்லாது பெண்கள் தங்கள் வாழ்வில் எப்படி தடைகளைத் தாண்டி முன்னேற வேண்டும் என்பதற்கும் ஒரு எடுத்துக்காட்டாக விளங்கினார்.
ஜெயலலிதா தலைமையின் கீழ் தமிழகத்தில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. முதலமைச்சரின் வாழ்க்கை பல முரண்பாடுகளை பின்னுக்குத் தள்ளி மறுக்க முடியாத வலிமையுடனும், உறுதியுடனும் திகழ்ந்துள்ளது. ஆண், பெண் இருபாலாருக்கும் பின்பற்றும் வகையில் அவரது வாழ்க்கை ஒரு எடுத்துக்காட்டாக விளங்கியுள்ளது,
ஆனால் அண்மையில் நிகழ்ந்த அவரின் திடீர் மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன.அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சில மாதங்கள் ,சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர் நன்கு குணமாகி வருவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென மாரடைப்பால் அவர் காலமானதாக கூறப்பட்டது என அனைத்து நிகழ்வுகளிலும் பல சந்தேகங்கள் நிலவுகின்றன.
இதில் மொத்தமாக சில உண்மைகள் மறைக்கப்பட்டுள்ளதாகவே தெரிகிறது.அவர் மருத்துவமனையில் இருந்த போது ஒருவர் கூட அவரை சந்திக்க அனுமதிக்கப்படவில்லை. ஜெயலலிதாவை சந்தித்து வாழ்த்துச் சொல்ல வேண்டும் என விரும்பியவர்கள் ஒருவருக்குக் கூட அந்த வாய்ப்பு வழங்கப்படவில்லை.
மக்களால் மிகவும் நேசிக்கப்பட்ட தமிழக தலைவர் குறித்த விபரங்கள் ஏன் மறைக்கப்பட்டன.? மறைந்த முதலமைச்சர் குறித்த உண்மைகளை மறைப்பதற்கு யாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவரை பார்த்துக் கொள்வதற்கும்,அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து முடிவு செய்வதற்கும் யாருக்கு அதிகாரம் உள்ளது? பொது மக்கள் மனதில் எழுந்துள்ள இந்த கேள்விகளுக்கு யார் பொறுப்பாக பதில் அளிப்பார்கள்?
பொது மக்கள் மனதில் பற்றி எரியும் இந்த கேள்விகளின் எதிரொலியாகவே நான் இந்த கடித்த்தை எழுதுகிறேன் என கௌதமி தெரிவித்தள்ளார்.
எனவே பல சந்தேகங்கள் நிறைந்திருக்கும் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தில் இருக்கும் மர்மங்களை தீர்க்க பிரதமர் மோடி முன்வர வேண்டும்.மக்களால் பெரிதும் விரும்ப் பட்ட ஒரு மாநில முதலமைச்சரின் மரணம் குறித்து அறிந்து கொள்ள,ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் உரிமையுண்டு.ஒரு தனிப்பட்ட நபரின் மரணமாக இருந்தால் ,அது குறித்து அறிந்துகொள்ளயாருக்கும் உரிமை இல்லாமல் இருக்கலாம்.ஆனால் மக்களால் விரும்பப்பட்ட,தமிழக முதலமைச்சராக பதவி வகித்த ஒருவரின் மரணம் குறித்து அறிந்து கொள்ள ஒவ்வொருவரும் முயற்சி செய்வது எந்த விதத்திலும் தவறல்ல.
சராசரி இந்திய குடிமகனான நான் அனுப்பியுள்ள இந்த கடிதம் குறித்து தாங்கள் விரைந்து நடவடிக்கை எடுப்பீர்கள் என முழுமனதுடன் நம்புவதாக நடிகை கௌதமி தனது கடித்த்தில் குறிப்பிட்டுள்ளார். .எதற்கும் அஞ்சாமல் துணிவோடு முடிவெடுப்பவர் என தாங்கள் பல முறை நிரூபித்திருக்கிறீர்கள்.எனவே கண்டிப்பாக இந்தப் பிரச்சனையிலும் தாங்கள் உண்மையை வெளிக்கொண்டுவர நடவடிக்கை எடுப்பீர்கள் என நம்புவதாக கௌதமி தெரிவித்துள்ளார்.