சேகர் ரெட்டி வழக்கில் அமைச்சர்களுக்கு நெருக்கடி முற்றுகிறது... ஆளுநர்-தலைமை செயலாளர் சந்திப்பில் முக்கிய ஆலோசனை!

First Published May 13, 2017, 8:54 AM IST
Highlights
Governor-Chief Secretary meeting regard Sekar Reddy case


மணல் மன்னன் சேகர் ரெட்டிக்கு நிபந்தனை ஜாமீன் கிடைத்தாலும், அதனால் அமைச்சர்களுக்கு எந்த பயனும் இல்லை. இது ஒரு தற்காலிக ரிலாக்ஸ் என்றே சொல்லப்படுகிறது.

சேகர் ரெட்டியின் வாக்குமூலம், அவரது வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் ஆகியவற்றில் இருந்து அமைச்சர்கள் தப்பிக்கவே முடியாது என்று சொல்லப்படுகிறது.

வருமான வரித்துறை சார்பில், சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க சொல்லி கடிதம் அனுப்பிய பின்னரும், மாநில அரசின் சார்பில் எந்த விசாரணைக்கும் உத்தரவிடப்படவில்லை.

முதல்வர் எடப்பாடியின் பெயரே, நடவடிக்கை பட்டியலில் இருப்பதால், மாநில காவல் துறையால், இந்த பிரச்சினையை எப்படி குறுக்கீடு இல்லாமல் கையாள முடியம் என்று கேள்வி எழுந்துள்ளது.

அதனால், இந்த வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றலாமா? என்று மத்திய அரசு யோசித்து வருகிறது. ஒரு வழக்கை சி.பி.ஜக்கு மாற்றவேண்டுமானால், வெளிநாடு, அல்லது வெளிமாநில தொடர்புகள் இருக்க வேண்டும்.

சேகர் ரெட்டி வழக்கை பொறுத்தவரை வெளிமாநில தொடர்புகள் இருப்பதால், சி.பி.ஐ க்கு மாற்றுவதில் எந்த சிக்கலும் இல்லை.

அதேசமயம், தலைமை செயலாளர் கிரிஜா வைத்யநாதனிடம் இருந்த லஞ்ச ஒழிப்பு துறை பறிக்கப்பட்டு, கூடுதல் பொறுப்பாக அதை நிரஞ்சன் மார்ட்டியிடம் ஒப்படைத்திருப்பது குறித்தும் மத்திய அரசு கூர்ந்து கவனித்து வருகிறது.

இந்நிலையில்தான், தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் சந்தித்து பேசி உள்ளார். இந்த சந்திப்பு, முதல்வர் உள்பட, அமைச்சர்கள் வயிற்றில் புளியை கரைத்துள்ளது.

மத்திய அரசை பொறுத்தவரை, குடியரசு தலைவர் தேர்தல் முடியும் வரை கொஞ்சம் அடக்கியே வாசிக்க விரும்புகிறது. முடிந்த பிறகு, நடவடிக்கை எடுக்கலாம் என்பதே அதன் திட்டமாக உள்ளது.

ஆகவே, குடியரசு தேர்தல் முடியும் வரை முதல்வர் உள்பட, அமைச்சர்கள் மீது எந்த நடவடிக்கையும் இருக்காது என்பது உறுதியாக உள்ளது.

click me!