அரசின் திட்டங்களை செயல்படுத்துவதற்காகவும் அதுதொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் அரசு ஊழியர்களை பயன்படுத்திய காலம் போய், கூட்டங்களில் கூட்டம் காட்டுவதற்காக அரசு ஊழியர்களை பயன்படுத்தும் அவலம் இன்று நடக்கிறது.
1970களின் தொடக்கத்தில் குடும்ப கட்டுப்பாடு தொடர்பான கணக்கெடுப்பு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள அரசு ஊழியர்கள் பணிக்கப்பட்டனர். அதேபோல, குடும்ப அட்டை கணக்கெடுப்பு பணி உள்ளிட்ட பல்வேறு அரசு திட்டங்களை செயல்படுத்த அரசு ஊழியர்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றனர்.
இப்படியாக ஆரோக்கியமான விஷயங்களுக்கு பயன்படுத்தப்பட்ட அரசு ஊழியர்கள், தற்போது கூட்டம் காட்டுவதற்காக பயன்படுத்தப்படுகின்றனர். திட்டங்களுக்கு அழைக்கப்பட்ட காலம் போய் கூட்டங்களுக்கு அழைக்கும் அவலம் தற்போது நிகழ்கிறது.
எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா, அரசு சார்பில் மாவட்டந்தோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த விழாவிற்கு கூட்டமே வருவதில்லை. அதிமுக, தங்களுக்கு இருப்பதாக கூறும் தொண்டர்கள் சென்றாலே போதும்.. கூட்டம் ஓரளவிற்கு இருக்கும். ஆனால், முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர் கலந்துகொண்டும்கூட விழாவில் நாற்காலிகள் காலியாக உள்ளதை காண முடிகிறது.
அரசுப் பள்ளி மாணவர்களை கூட்டம் காட்டுவதற்காக பயன்படுத்திவந்தனர். ஆனால் அதற்கும் உயர்நீதிமன்றம் ஆப்பு அடிக்க, தற்போது அரசு ஊழியர்களும் அரசு மருத்துவர்களும் அழைக்கப்பட்டு கூட்டம் காண்பிக்கப்படுகிறது.
இதெல்லாம் ஒரு பிழைப்பா? என மக்கள், தங்களின் ஆதங்கத்தை விமர்சனமாக தெரிவிக்கின்றனர்.