TN Govt : ரூ.100 கோடி மதிப்பில் “ நமக்கு நாமே” திட்டம்.. அரசாணை வெளியிட்ட தமிழக அரசு..

By Raghupati RFirst Published Dec 20, 2021, 11:59 AM IST
Highlights

ஊரகப்பகுதிகளில் நமக்கு நாமே திட்டத்திற்கு ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, தமிழக அரசால் தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

சமீபத்தில் சேலத்தில் நமக்கு நாமே திட்டம் மற்றும் நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டம் ஆகியவை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டது. மக்களின் சுய உதவி ,சுயசார்பு எண்ணம் ஆகியவற்றை வலுப்படுத்தவும் ,அதை பரவலாகவும் ,மக்கள் பங்கேற்புடன் கூடிய நமக்கு நாமே திட்டத்தை கடந்த 1997ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் மு கருணாநிதி நிதிநிலை அறிக்கையில் அறிவித்தார்,  மக்களின் சுய சார்பு தன்மையை ஊக்குவிக்கவும் ,பலப்படுத்தவும் ,மக்களுக்கு தேவையான திட்டங்களை அவர்களது பங்களிப்புடன் செயல்படுத்தி, பொது சொத்துக்களை உருவாக்கிப் பராமரித்து வருவது நமக்கு நாமே திட்டத்தின் உயரிய நோக்கம்.

இத்திட்டத்தின் மூலம் வளர்ச்சிப் பணிகளை திட்டமிடுதல் , வள ஆதாரங்களை திரட்டுதல், பணிகளை மேற்கொள்ளுதல், மேற்பார்வை செய்தல் ஆகிய மக்கள் பணிகள் இருக்கும். மாநில அளவில் 300 கோடி மதிப்பீட்டில் நமக்கு நாமே திட்டம் மாநகராட்சிகள், நகராட்சிகள்,பேரூராட்சிகளில் மேற்கொள்ளப்படும். இத்திட்ட பணியானது குறைந்தபட்ச மூன்றில் ஒரு பங்கு பொதுமக்களின் பங்களிப்பு நிதி மற்றும் அரசு நிதி உதவியுடன் செயல்படுத்தப்படுகிறது.  இந்நிலையில் ஊரகப் பகுதிகளில் மக்கள் பங்களிப்புடன் ரூ.100 கோடி மதிப்பிலான நமக்கு நாமே திட்டத்தை செயல்படுத்துவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 

அரசுப் பள்ளி, கல்லூரிகளில் நவீன , ஆய்வகங்கள் கட்டும் பணிகள் நமக்கு நாமே திட்டத்தில் மேற்கொள்ளப்படும். நமக்கு நாமே திட்டப்பணிகளுக்கான மதிப்பீட்டுத்தொகையில் மூன்றில் ஒரு பங்கு பொதுமக்களின் பங்களிப்பாக இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊரகப்பகுதிகளில் கோரிக்கைகள் அதிகளவு வரப்பெற்றால் முக்கியத்துவம் வாய்ந்த பணிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!