7 தமிழர் விடுதலை விவகாரத்தை இந்திய அரசு பந்தாடுகிறது.. நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ஆவேசம்.

By Ezhilarasan BabuFirst Published Feb 10, 2021, 10:39 AM IST
Highlights

வெறும் சோர்வும் உணவின்மையும் மட்டுமல்ல அவருடைய மரணத்திற்கு காரணம், இந்த அரசு கடைபிடித்த கொள்கையே மிக முக்கியமான காரணம் என்பதை இங்கு பதிவு செய்கிறேன். இந்தக் காலத்தில் நாடு எண்ணற்ற ஜம்லோக்களை இழந்துள்ளது.

விவசாயிகள் ஏர் கலப்பை சுமக்கிறார்கள், அரசாங்கமோ கார்ப்பரேட்டுகளுக்கு பல்லக்கு சுமக்கிறது என குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் எம் பி பேசியுள்ளார்.

அதன் விவரம்; நம்முடைய குடியரசுத் தலைவர் அவர்கள் இந்த அரசாங்கத்தை வெகுவாகப் புகழ்ந்து ஒரு உரை நிகழ்த்தியிருக்கிறார். குறிப்பாக கொரோனா காலத்தில் மிகவும் துரிதமாகவும் சமயோசிதமாகவும் செயல்பட்டு நாட்டின் பல லட்சக்கணக்கானவர்களை இந்த அரசு காப்பாற்றியிருக்கிறது என்று குறிப்பிட்டிருக்கிறார்.ஆஸ்திரேலியாவில் இருந்து இயங்கும் தி லோலி இன்ஸ்டிடியூட் சமீபத்தில் உலக அளவில் நாடுகள் கொரோனா தொற்றை கையாண்ட விதத்தை அதைப்பற்றிய தரவுகளின் அடிப்படையில் ஒரு பட்டியல் வெளியிட்டு இருக்கிறது. அதில் இந்தியாவின் இடம் 86 என்பதை குடியரசுத் தலைவர் அறிவாரா என்று தெரியவில்லை.

  

அதேபோல கொரோனா காலகட்டத்தில் பல திட்டங்களை வகுத்து பல லட்சக்கணக்கானோரை இந்த அரசு காப்பாற்றி இருக்கிறது என்று குடியரசுத் தலைவர் அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். நான் இந்த நேரத்தில் 13 வயதான ஜம்லோவை நினைவு படுத்த கடமைப்பட்டிருக்கிறேன். தெலுங்கானாவில் இருந்து சத்தீஸ்கர் நோக்கி சென்று கொண்டிருந்த 13 வயது ஜம்லோ மூன்று நாட்கள் 140 கிலோ மீட்டர் நடந்து தன்னுடைய ஊரை அடைவதற்கு 60 கிலோ மீட்டருக்கு முன்பு மயங்கி விழுந்து இறந்து போனார். வெறும் சோர்வும் உணவின்மையும் மட்டுமல்ல அவருடைய மரணத்திற்கு காரணம், இந்த அரசு கடைபிடித்த கொள்கையே மிக முக்கியமான காரணம் என்பதை இங்கு பதிவு செய்கிறேன். இந்தக் காலத்தில் நாடு எண்ணற்ற ஜம்லோக்களை இழந்துள்ளது. உண்மையில் குடியரசுத் தலைவரினுடைய உரை வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதாக இருக்கிறது என்பதை இந்த அவையிலே பதிவு செய்ய கடமைப்பட்டிருக்கிறேன். 

அதேபோல பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை பற்றிய விஷயம், கடந்த நவம்பர் மாதம் குடியரசுத் தலைவர் அவர்களுக்கு நான் அனுப்பிய கடிதத்தில் உள்துறை அமைச்சரின் பரிசீலனைக்கு அனுப்புவதாக குடியரசுத் தலைவர் எனக்கு பதில் அளித்திருக்கிறார். ஆனால் சமீபத்திலே உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு குடியரசுத் தலைவருக்கு தான் இந்த அதிகாரம் இருக்கிறது என்று சொல்கிறது.  மாநில ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு தான் அதிகாரம் இருக்கிறது என்கிறார், இப்படியாக மூன்று பேரும் கால்பந்தாட்டத்தை போல எழுவரினுடைய விடுதலையை கையாளுகிறார்கள். இன்னும் குறிப்பாகச் சொல்லப்போனால் தமிழக அரசினுடைய சிறை விதிகள் ஆயுள் தண்டனை 20 ஆண்டுகள் மட்டுமே என்று சொல்கிறது அதைக் கடந்து 10 ஆண்டுகள் ஆயுள் தண்டனை அனுபவித்திருக்கிற ஏழு பேருக்கும் நீதி வேண்டும் என்பதையும் இந்த நேரத்திலே நான் வலியுறுத்திச் சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். 

 

click me!