
தூத்துக்குடி செய்தி ஒளிபரப்புவதை உடனே நிறுத்துமாறு, அரசிடம் இருந்து மிரட்டல் விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளிகள், ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் புகுந்து அங்கு நிறுத்தப்பட்டிருந்த அரசு வாகனங்கள்
தீக்கிரையாக்கப்பட்டன. போலீசாரால் அவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை. இதையடுத்து கல்வீச்சின் மூலம், ஆட்சியர் அலுவலகமே சூறையாடப்பட்டது. அப்போது கலெக்டர் அலுவலகத்தின் ஒரு பகுதி தீ வைத்து எரிக்கப்பட்டது.
இதனால் அங்கு உச்சகட்ட பரபரப்பு நிலவியது. விரட்டியடிக்கப்படும் போராட்டக்காரர்கள் மீண்டும், திரும்பி வந்து தாக்குவதால் போலீசாரால் நிலைமையை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர்.
போராட்டக்காரர்கள் ஆவேசத்தை பார்த்த, தூத்துக்குடி ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியும், தடியடி நடத்தியும் மக்களை விரட்டினர்.
போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியாகியுள்ளார். துப்பாக்கி சூட்டில் நான்குக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். துப்பாக்கி சூட்டில் பலியானவர் பெயர், விவரம் தெரியவில்லை. அதேநேரம், ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறி வருகிறார்கள். ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் காவல்துறையினரின் எச்சரிக்கையை மீறி ஆட்சியர் அலுவலகத்திற்குள் நுழைந்தனர்.
ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது இறுதி நாளில் நடந்த பெரும் கலவரத்தை நினைவு படுத்துவதைப்போலவே, இந்த ஸ்டெர்லைட் ஆலை க்கு எதிரான இந்த கலவரம் ஒட்டுமொத்த தமிழகத்தின் மூளை முடுக்கெங்கும் பரவிவிட்டதால், அரசிடமிருந்து மிரட்டல் வந்துள்ளதாம்.
ஆமாம், அதாவது தொடர்ந்து பிரேக்கிங் ஆக ஒளிபரப்பாகிவரும் இந்த போராட்டம் சம்பந்தமாக தொலைகாட்சிகளில் செய்திகளை நிறுத்தாவிட்டால், அரசுக் கேபிளில் சேனல் கட் செய்யப்படும் என மிரட்டல் வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.