
திருமண நிகழ்வுக்கான இ -பதிவில் தவறான தகவல் கொடுத்திருந்தாலோ, ஒரு நிகழ்வுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பதிவுகள் பதிவுகள் செய்திருந்தாலோ கிரிமினல் குற்றமாக கருதி நடவடிக்கை பாயும் என அரசு எச்சரித்துள்ளது.
ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று முதல் 27 மாவட்டங்களில் திருமணத்திற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திருமண நிகழ்விற்கு வரும் அத்தனை விருந்தினர்களுக்கும் சேர்த்து ஒரு பதிவு மட்டுமே செய்ய வேண்டும், தவறான தகவல்கள் தந்திருந்தாலோ, ஒரு நிகழ்விற்கு ஒன்றுக்கு மேற்பட்ட இ-பதிவுகள் செய்திருந்தாலோ சிவில் மற்றும் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும்.
ஒரே பதிவிலேயே அனைத்து வாகனங்களுக்கும் இ-பதிவு செய்ய வழி வகுக்கப்பட்டுள்ளது. திருமணத்தில் நேரடியாக சார்ந்துள்ள நபர் (விண்ணப்பதாரர் - மணமகள், மணமகன், தாய், தந்தை, போன்றோர்) ஒருவர் மட்டுமே இப்பதிவை மேற்கொள்ளலாம். விண்ணப்பதாரர் பெயர் பத்திரிக்கையில் கண்டிப்பாக இருக்க வேண்டும். திருமண அழைப்பிதழை கண்டிப்பாக பதிவேற்றம் செய்ய வேண்டும். தவறான தகவல்கள் தந்திருந்தாலோ, ஒரு நிகழ்விற்கு ஒன்றுக்கு மேற்பட்ட இ-பதிவுகள் செய்திருந்தாலோ Epidemic Diseases Act, 1897 மற்றும் Disaster Management Act, 2005 இன் படி (சிவில் மற்றும் கிரிமினல்) நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து வாகனங்களின் எண்கள், ஓட்டுநர் பெயர், கைபேசி எண், அதில் பயணிக்கும் ஒவ்வொருவருடைய பெயர், ஏதேனும் ஒரு அரசாங்க அடையாளம் (ஆதார், ரேஷன், ஓட்டுநர் உரிமம், பான் அட்டை, பாஸ்போர்ட்) தயாராக வைத்துக்கொள்ளவும்,
திருமணம் நடைபெறும் அதே மாவட்டத்திற்குள் இருந்து திருமணத்திற்கு வரும் விருந்தினர்களுக்கு இ- பதிவு செய்ய வேண்டாம். கோயம்பத்தூர் , நீலகிரி , திருப்பூர் , ஈரோடு , சேலம் , கரூர் , நாமக்கல் , தஞ்சாவூர் , திருவாரூர் , நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் திருமண நிகழ்விற்கு இ-பதிவு செய்ய அனுமதி இல்லை. திருமண நிகழ்விற்கு வரும் விருந்தினர்களும் இந்த மாவட்டங்களில் இருந்து வருவதற்கும் அனுமதி இல்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.