தமிழக சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவப்படத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைக்க உள்ளார் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
சபாநாயகர் அப்பாவு சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தமிழ்நாட்டு சட்டப்பேரவையில் ஆகஸ்ட் 2 அன்று முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவப்படத்தை மாலை 5 மணிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைக்கிறார். படத்திறப்பு விழாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தலைமை வகிக்கிறார். முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலை வகிக்கிறார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை நூற்றாண்டு விழாவிலும் குடியரசு தலைவர் பங்கேற்க உள்ளார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கட்சி பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்படும். விழாவுக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு சட்டப் பேரவைச் செயலகம் சிறப்பாக செய்து வருகிறது” என்று அப்பாவு தெரிவித்தார். கடந்த வாரம் டெல்லி சென்ற தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், கருணாநிதி உருவப் படத்தைத் திறந்து வைக்கும்படி குடியரசுத் தலைவருக்கு அழைப்பு விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.