நாளை முதல் மின்தடை ? கிராமங்களில் அதிக நேரம் மின்வெட்டு !!

By Selvanayagam PFirst Published Sep 16, 2018, 9:44 AM IST
Highlights

காற்றலை மின் உற்பத்தி முற்றிலும் குறைத்துவிட்ட சூழ்நிலையில், அனல் மின் நிலையங்களில், 1.85 லட்சம் டன் நிலக்கரி மட்டும் இருப்பு உள்ளதால், நாளை முதல், கிராமங்களில், அதிக நேரம் மின் தடை செய்ய வேண்டிய அபாயம் உருவாகியுள்ளது.

தமிழக மின் வாரியத்திற்கு, 4,320 மெகா வாட் திறனில், அனல் மின் நிலையங்கள் உள்ளன. இவற்றில், தினமும் சராசரியாக, 3,500 மெகா வாட்; கோடை காலத்தில், 4,000 மெகா வாட் வரை, மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

மே முதல், காற்றாலைகளில் இருந்து, தினமும் சராசரியாக, 3,000 மெகா வாட்டிற்கு மேல் மின்சாரம் கிடைத்தது. இதனால், அனல் மின் உற்பத்தியை, மின் வாரியம் குறைத்தது. இம்மாத இறுதியில், காற்றாலை சீசன் முடிவடைய உள்ளதால், தற்போது, அவற்றில் இருந்து, 300 - 400 மெகா வாட் மட்டுமே கிடைக்கிறது.

வெயிலும் சுட்டெரிப்பதால், மின் வாரியம், அனல் மின் உற்பத்தியை, மீண்டும், அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஒடிசா, மேற்கு வங்க மாநிலங்களில் உள்ள சுரங்கங்களில் இருந்து, தமிழகத்திற்கு,நிலக்கரி வரத்து பாதித்துள்ளதால், நிலக்கரிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதனால், அனல் மின் நிலையங்களில், முழு அளவில் உற்பத்தி செய்ய முடியவில்லை. மத்திய தொகுப்பில் இருந்து, தமிழகத்திற்கு தினமும், 6,138 மெகா வாட் மின்சாரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதில், 2,500 மெகா வாட் வரை குறைவாகவே கிடைக்கிறது. இதனால், மின் வாரியத்தால், மின் தேவையை பூர்த்தி செய்ய முடியாத நிலைஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, நெருக்கடி அதிகம் இருந்த, 8, 9, 10ம் தேதிகளில், கிராம பகுதிகளில், ஐந்து முதல் ஆறு மணி நேரம் வரை, மின் தடை செய்யப்பட்டது.

 இந்நிலையில்  மேட்டூர் அனல் மின் நிலையத்தில் உள்ள, 600 மெகா வாட் அலகில், 11ம் தேதி முதல், மீண்டும், மின் உற்பத்தி துவங்கப்பட்டது. இதையடுத்து, மின் தடை நேரம், ஒரு மணி முதல், இரண்டு மணி வரை என, குறைக்கப்பட்டது.

இந்நிலையில், தற்போது இரண்டு  நாட்களுக்கு தேவையான நிலக்கரி மட்டுமே இருப்பு உள்ளது; அனல் மின் நிலையங்களில், தொடர்ந்து மின் உற்பத்தி செய்ய, தினமும், 72 ஆயிரம் டன் நிலக்கரி தேவை. அதை, உடனே வழங்கவிட்டால், அனல் மின் நிலையங்களை மூட வேண்டிய நிலை ஏற்படும்' என, பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அவசர கடிதம் எழுதியிருந்தார்.

நேற்று காலை நிலவரப்படி, அனல் மின் நிலையங்களில், 1.85 லட்சம் டன் நிலக்கரி மட்டுமே இருப்பு உள்ளது. அதை பயன்படுத்தி, நாளை வரை மின் உற்பத்தி செய்யலாம். இதனால், நாளை முதல், அனல் மின் நிலையங்களில், மின் உற்பத்தி பாதித்தால், மின் தடை நேரம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதையடுத்து நாளை முதல் முதல் கட்டமாக நாளை முதல் கிராமப் புறங்களில் மின் வெட்டு அமல்படுத்தப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

click me!