முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழக்கு... இன்று வெளியாக போகும் தீர்ப்புக்கு நேரம் குறித்த நீதிபதிகள்..!

By vinoth kumarFirst Published Nov 30, 2022, 6:41 AM IST
Highlights

சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் கோரியதில் 500 கோடி ரூபாய் முறைகேடுகள் செய்ததாகவும், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது குற்றச்சாட்டு எழுந்தது. 

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு, வருமானத்துக்கு அதிகமான சொத்து குவித்த வழக்குகளை ரத்து செய்யக் கோரி வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது. 

சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் கோரியதில் 500 கோடி ரூபாய் முறைகேடுகள் செய்ததாகவும், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும் முன்னாள் அமைச்சர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. அறப்போர் இயக்கம் மற்றும் திமுக சார்பில் வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை வைத்து லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்.பி.வேலுமணி மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்குகளை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தார். 

இதையும் படிங்க;- கோவையில், டிச.2ம் தேதி திமுக ஆட்சியை கண்டித்து அதிமுக உண்ணாவிரதம் - எஸ்.பி.வேலுமணி

இந்த வழக்குகள் நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் டீக்காராமன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணை நடைபெற்றது. அப்போது, எஸ்.பி.வேலுமணி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் ஒளிவுமறைவற்ற முறையில் டெண்டர் கோரப்பட்டதாகவும், அதில் தனக்கு எந்த பங்கும் இல்லை, அந்த குழுவிலும் இடம்பெறவில்லை. வேலுமணிக்கு எதிரான புகாரில் எந்த முகாந்திரமும் இல்லை என்று வாதிடப்பட்டது. 

 அப்போது புகார்தாரரான அறப்போர் இயக்கத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பொத்தாம் பொதுவாக அல்லாமல், குறிப்பிட்டு குற்றச்சாட்டுக்கள் கூறி அளிக்கப்பட்ட புகாருக்கு ஆதாரமாக ஏராளமான ஆவணங்கள் தங்கள் தரப்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்றார். தற்போதைய அரசு உள்நோக்கத்துடன் வழக்குப்பதிவு செய்துள்ளதாக வேலுமணி தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதம் தவறு. முந்தைய அரசும், லஞ்ச ஒழிப்புத் துறையும் தான் உள்நோக்கத்துடன் செயல்பட்டது. 

கோவையில் 47 டெண்டர்கள் அமைச்சரின் உறவினர்களுக்கு சொந்தமான இரு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது. ஒரே ஐ.பி. முகவரியில் இருந்து இந்த டெண்டர்கள் கோரி விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. அமைச்சருக்கு வேண்டியவர்கள் மட்டுமே கலந்துகொள்ளும் வகையில் குறிப்பிட்ட நேரத்தில் விண்ணப்பிக்கும்படி மாநகராட்சி அதிகாரிகளால் அறிவுறுத்தப்பட்டு, டெண்டர் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆர்.எஸ்.பாரதி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தமிழகத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் அடிப்படையில் மட்டுமே, உள்நோக்கத்துடன் வழக்குப்பதிவு செய்யப்பட்டு குற்றம் சாட்டப்படுவதாக குறிப்பிட்டார். புலன் விசாரணை அதிகாரியின், விசாரணை முடிவை அடிப்படையாகக் கொண்டுதான் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்று விளக்கமளித்தார்.

 லஞ்ச ஒழிப்பு துறை தரப்பில் ஆஜரான அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான ஒப்பந்ததாரர்கள் பங்கேற்பதை தடுக்கும் வகையில், நிறுவனங்களின் ஆண்டு வருமானம் 10 கோடி ரூபாய் என்பதை 20 கோடியாக மாற்றி அமைத்துள்ளனர் என்பது விசாரணையில் தெரிய வந்தது என்று தெரிவித்தார். அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவு பெற்ற நிலையில், வேலுமணி தாக்கல் செய்திருந்த வழக்குகளின் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர். இந்நிலையில், எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்த மனு மீது உயர்நீதிமன்றம் இன்று பிற்பகல் 2:30 மணிக்கு தீர்ப்பு வழங்க உள்ளது. 

இதையும் படிங்க;-  குற்றச்சாட்டுக்களில் இருந்து அவரை விடுவித்துவிட முடியாது.. நீதிபதிகள் கூறிய கருத்தால் வெல வெலத்து வேலுமணி..!

click me!