குற்றமே எங்கள் வாழ்க்கை என வாழ்ந்து கொண்டிருக்கும் குடும்பம்தான் சசிகலாவின் குடும்பம் என முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.
ஓபிஎஸ் அணியில் இருந்து, ஆறுக்குட்டி எம்எல்ஏ, வெளியேறியதை தொடர்ந்து அந்த அணியின் அவசர ஆலோசனை கூட்டம் கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் நடந்தது.
கூட்டம் முடிந்தபின் ஓபிஎஸ் அணியை சேர்ந்த கே.பி. முனுசாமி செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, தவறு செய்வதையே தங்களது வாழ்வின் லட்சியமாக கொண்டு வாழ்ந்து வரும் குடும்பம்தான் சசிகலாவின் குடும்பம் என தெரிவித்தார்.
ஊழல் பிரச்சனையில் சிக்கித்தான் சசிகலா சிறை சென்றுள்ளார். ஆனால் அவர் இன்னும் தனது தவறை உணரவில்லை என்று தெரிவித்த முனுசாமி, தவறை உணர்ந்திருந்தால் அவர் சிறையில் சொகுசாக வாழ்வதற்கு லஞ்சம் கொடுத்திருக்க மாட்டார் என தெரிவித்தார்.
சிறை விவகாரத்தில் சசிகலா செய்த தவறால் தமிழகத்திற்கு மிகப் பெரிய தலைகுனிவு ஏற்பட்டுவிட்டதாக வேதனை தெரிவித்தார்.