50 நாட்கள் கடந்தும் கரை திரும்பாத மீனவர்கள்: போர்க்கால அடிப்படையில் தேடுதல் நடத்த எஸ்.டி.பி.ஐ. கோரிக்கை.

By Ezhilarasan BabuFirst Published Sep 14, 2020, 11:52 AM IST
Highlights

ஆனால், 50 நாட்களை கடந்தும் இன்றுவரை காணாமல் போனவர்கள் நிலை என்ன? என்பது குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனால் சம்மந்தப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர் மிகவும் கவலையடைந்துள்ளனர்.

50 நாட்கள் கடந்தும் கரை திரும்பாத சென்னை ராயபுரம் மீனவர்களை மீட்க போர்க்கால அடிப்படையில் தேடுதல் பணியை துரிதப்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகத்திலிருந்து, கடந்த ஜூலை 23 அன்று விசைப் படகில் மீன்பிடிக்கச் சென்ற ராயபுரத்தை சேர்ந்த  10 மீனவர்கள், கடந்த ஆகஸ்ட் 7 ந்தேதி கரை திரும்பியிருக்க வேண்டிய நிலையில் அவர்கள் இன்று வரை கரை திரும்பவில்லை. காணாமல் போன மீனவர்களை ஜூலை 28 முதல் தொடர்புகொள்ள முடியவில்லை என சம்பந்தப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர் மீன் வளத்துறை இயக்குனரிடமும், சென்னை மாவட்ட ஆட்சியரிடமும், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரிடமும் மனு அளித்து, காணாமல் போனவர்களை மீட்க கோரிக்கை வைத்தனர். 

 

ஆனால், 50 நாட்களை கடந்தும் இன்றுவரை காணாமல் போனவர்கள் நிலை என்ன? என்பது குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனால் சம்மந்தப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர் மிகவும் கவலையடைந்துள்ளனர். காணாமல் போன மீனவர்களை கண்டுபிடிப்பது தொடர்பாக இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்த வெளிப்படையான எந்த தகவலும் கிடைக்கப்பெறவில்லை என மீனவர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த ஆகஸ்ட் 8ம் தேதி காசிமேடு மீன்வளத்துறை அலுவலகத்துக்கு மீனவர்கள் ஊர்வலமாக சென்று ஆர்ப்பாட்டம் நடத்திய நிலையில், கடலோர காவல்படையை வைத்து தேடிகொண்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

ஆனால் சட்டப்படி கடலோர காவல்படை 60 கடல்மைல்களுக்கு அப்பால் சென்று தேடமுடியாது; இந்திய கடற்படைதான் இந்த பணியைச் செய்ய முடியும். ஆகவே, தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் காணாமல் போன மீனவர்களை தேட வேண்டும். இந்திய கடற்படை மற்றும் விமானப்படைகளை தேடுதல் பணியில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ஹெலிகாப்டர்கள் கொண்டு தேடும் பணிகளை துரிதப்படுத்த வேண்டும். காணாமல் போன மீனவர்களின் குடும்பத்தினருக்கு அரசு உதவிகளை வழங்க வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றேன். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
 

click me!