கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் கூடுதலாக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இறுதிகட்ட எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் கூடுதலாக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இறுதிகட்ட எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கொரோனா என்ற உயிர்க்கொல்லி மக்களை ஆட்டிப்படைத்து வரும் நிலையில், அதற்குச் சிகிச்சை என்ற போர்வையில் ஒரு சில தனியார் மருத்துவமனைகள் தங்களிடம் வரும் நோயாளிகளிடம் கொள்ளை கட்டணம் வசூலித்து வருகின்றன. இந்த சூழலில் தமிழக அரசு தனியார் மருத்துவமனைகளுக்கான கொரோனா சிகிச்சை கட்டணத்தை நிர்ணயித்தது. இந்த கட்டணத்தை விட கூடுதலாக வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
தமிழகத்தில் பல மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்காக வரும் நோயாளிகளிடம் ‘பேக்கேஜ்’ என்ற பெயரில் லட்சக்கணக்கில் கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் வந்தன. இதையடுத்து சில மருத்துவமனையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில், சென்னை கீழ்ப்பாக்கத்தில் பி- வெல் மருத்துவமனையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் நோயாளி ஒருவருக்கு 19 நாட்களுக்கான சிகிச்சைக்கு 12,20 லட்சம் வசூலிக்கப்பட்ட விவரம் உறுதிசெய்யப்பட்டது.
மேலும், தனியாரது சிகிச்சைக்கு அரசு வழங்கிய நெறிமுறைகளின்படி கூடுதல் சிறப்பு மருந்துகள் ஏதும் பயன்படுத்தப்படவில்லை. கூடுதல் கட்டணம் வசூல் செய்தது உறுதி செய்யப்பட்ட நிலையில் பி - வெல் மருத்துவமனைக்கு கொரோனா நோய் சிகிச்சைக்காக அளிக்கப்பட்ட அரசு அனுமதி தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று டுவிட்டர் பதிவில்:- கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் கூடுதலாக கட்டணம் வசூலிப்பதாக புகார் பெறப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனா சிகிச்சை வழங்கும் அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும், அரசால் அங்கீகரிக்கப்பட்ட கட்டண விவரம் தெளிவாக பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட வேண்டும் என கண்டிப்புடன் தெரிவித்துள்ளார்.