
சட்டமன்றத்தில் பன்னீர்செல்வத்தின் நடவடிக்கைகள், அவர் அதிமுகவுக்கு தலைமை வகிக்கும் தகுதியை இழந்துவிட்டார் என்பதையே காட்டுகிறது என அதிமுக முன்னாள் எம்பி கே.சி பழனிச்சாமி விமர்சித்துள்ளார். ஒருபுறம் லஞ்ச ஊழல் வழக்குகள், மறுபுறம் கொடநாடு கொலை, கொள்ளை வழக்குகள் போன்ற பிரச்சினைகளில் என்னை எதிலும் கைது செய்து விடாதீர்கள். நான் உங்கள் அடிமை தான் என்பது போல அவரது பேச்சுக்களும் நடவடிக்கைகளும் இருக்கிறது என அவர் விமர்சித்துள்ளார்.
தமிழக சட்டமன்றத்தில் நிதி நிலை அறிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் திட்டங்களை கைவிட வேண்டும் என வலியுறுத்தி தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதற்கான தீர்மானத்தை முதலமைச்சர் ஸ்டாலின் முன்மொழிந்தார். அப்போது அதன் மீதான விவாதம் நடைபெற்றது, அதில் காங்கிரஸ், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்தன. அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தன. பின்னர் மீண்டும் அவை நடவடிக்கையில் அதிமுகவினர் பங்கேற்றனர், பின்னர் வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானத்தின் மீது பேசிய சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ. பன்னீர்செல்வம். " நதியினில் வெள்ளம்.. கரையினில் நெருப்பு.. இரண்டுக்கும் நடுவே இறைவனின் சிரிப்பு" இதுதான் என் தற்போதைய நிலைமை, இது அவை முன்னவர் துரைமுருகனுக்கு நன்றாகதெரியும் என கூறினார்.
அதற்கு பதில் அளித்து பேசிய அவை முன்னவர் துரைமுருகன், தாம் தெரிவித்த கருத்துக்கள் பன்னீர்செல்வத்தின் மனதை தனிப்பட்ட முறையில் காயப்படுத்தி இருந்தால் அவற்றை அவை குறிப்பில் இருந்து நீக்குமாறு சபாநாயகரிடம் கேட்டுக் கொண்டார். ஆனால் அவையில் ஓ.பன்னீர் செல்வத்தின் இந்த பேச்சு அதிமுகவினர் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியையும், பல கேள்விகளையும் எழுப்பியுள்ளது. இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள, அதிமுக முன்னாள் எம்பி கே.சி பழனிச்சாமி ஓ.பன்னீர்செல்வம் முழுக்க முழுக்க திமுகவிடம் சரணடைந்து விட்டார். அதனால் தான் அவரின் சட்டமன்ற பேச்சு, நடவடிக்கைகள் இயல்புக்கு மாறாக உள்ளது.
கொடநாடு கொலை வழக்கு மற்றும் அதிமுகவினருக்கு எதிரான ஊழல் வழக்குகளின் பிடி இறுகி வரும் நிலையில், அதுபோன்ற எந்த வழக்குகளிலும் தன்னை கைது செய்துவிட வேண்டாம் என்பதை ஆளுங்கட்சிக்கு சொல்லாமல் சொல்லியுள்ளார் ஓபிஎஸ். அதனால் தான் " நதியினில் வெள்ளம் கரையினில் நெருப்பு இரண்டுக்கும் நடுவே இறைவனின் சிரிப்பு" என தன் நிலையை வெளிப்படுத்தியுள்ளார். அவர் மட்டுமல்ல செங்கோட்டையின், கே.பி முனுசாமி போன்ற தலைவர்களும் அவையில் திமுகவை புகழ்ந்து பேசி வருகின்றனர். முன்பு பாஜகவின் அடிவருடிகளாக இருந்த இவ்ர்கள் இப்போது திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடிவருடிகளாக மாறி இருக்கிறார்கள்.
இவர்கள் எந்த அளவிற்கு மாறி இருக்கிறார்கள் என்றால், திமுக எம்எல்ஏக்களையே ஸ்டாலின் புகழ்ந்து பேச வேண்டாம் என்று ஏன் கூறுகிறார் ஏனென்றால். அவர்கள் செய்ய வேண்டிய வேலையை எதிர்கட்சியில் உள்ள ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், கே.பி முனுசாமி போன்ற இந்த ஊழல் வாதிகள் முன்னெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால்தான் திமுகவை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் தன்னை புகழும் தேவையில்லை என்று ஸ்டாலின் சொல்லுமளவிற்கு இவர்களின் நடவடிக்கைகள் சென்றிருக்கிறது. இவர்களின் இந்த நிலைமையைப் பார்த்து அண்ணா திமுக தொண்டர்கள் கொதித்தெழுந்து கொண்டிருக்கிறார்கள்.
ஒருபுறம் பாஜகவுக்கு அடிமையாகவும் மறுபுறம் திமுகவுக்கு அடிமையாகவும் இவர்கள் மாறிவிட்டார்கள், ஆனால் அதிமுக தொண்டனை பொருத்தவரையில் ஒருபுறம் பிஜேபியை எதிர்த்து நிற்க வேண்டும், மறுபுறம் திராவிட முன்னேற்றக் கழகத்தை எதிர்த்து நிற்க வேண்டும், எம்ஜிஆர் காலம்தொட்டு செல்வி ஜெயலலிதா காலம் வரை இருந்த வலிமையான ஒரு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமாக, எந்த தேர்தலாக இருந்தாலும் வெற்றி பெறுகிற, நேர்மையான இயக்கமாக, குற்றச்சாட்டுகளுக்கு அப்பாற்பட்ட தலைவர்களால் நடத்தப்படுகிற இயக்கமாக இருக்கவேண்டும் என்றுதான் ஒவ்வொரு அண்ணா திமுக தொண்டனும் எதிர்பார்க்கிறான்.
அடுத்தடுத்து வழக்குகளில் ஒபிஎஸ், எஸ். பி வேலுமணி, கேபி முனுசாமி, என எவர் கைதானாலும் அதிமுகவுக்கு பாதிப்பு இல்லை. எவரை நம்பியும் அதிமுக இல்லை, மொத்தத்தில் ஓபிஎஸ் திமுகவை கெஞ்சும் நிலைக்கு வந்துவிட்டார் அதனால் அவர் அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் என்ற தகுதியை இழந்துவிட்டார் என கே சி பழனிச்சாமி காட்டமாக கூறியுள்ளார்.